தொண்டையில் கரகர

சென்னையின் சீஷோஷ்ண நிலை அவ்வளவு சரியில்லை. பகலில் வெயிலுடன் குளிர் காற்றும் சேர்ந்து அடிக்கிறது. இரவில் பனி கொட்டுகிறது. உலர்பனி. ஈரப்பதம் என்பது கொஞ்சம் கூட இல்லை. வண்டியில் பயணிக்கும்போது நேரடியாக நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. நம் அனுமதியின்றி மூக்கினுள் நுழைந்து நுரையீரலை சேதப்படுத்துகிறது.

நடை

நடைப்பயிற்சிக்குச் செல்வதென்றால், எனக்குப் பல வழிகள் உண்டு. முதலாவது, உள்ளகரம், மடிப்பாக்கம் செல்லும் மார்க்கம். இரண்டாவது, வேளச்சேரி செல்லும் பெரிய சாலை. மூன்றாவது, அதற்கு எதிர்த்திசையான கிண்டி செல்லும் பெரிய சாலை. நான்காவது, நங்கநல்லூர் வீதிகள். இவற்றில் வேளச்சேரி, கிண்டி செல்லும் சாலைகள் விசாலமானவையாக இருந்தாலும், வண்டிகளின் இரைச்சலும், இருசக்கர வாகன ஓட்டிகளின் வேகமும் அமைதியாக நடக்க விடுவதில்லை. மடிப்பாக்கம் செல்லும் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்துகொண்டு இருப்பதாலும், சமீபத்திய மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களாலும் சீரான நடை பயில்வது என்பது கடினமான காரியமான ஒன்றாக இருக்கிறது.

மேடைப்பேச்சு

மேடைப் பேச்செல்லாம் வாய்த்ததே இல்லை. அப்படியே அமைந்தாலும் மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிவிடுவது வழக்கம். ஆனால், ஏதேனும் விஷயம் குறித்து எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அதற்கான தரவுகள் இருக்கவேண்டும், நேரமும் வேண்டும். கூடவே கொஞ்சம் அமைதியான சூழல். அவ்வளவுதான்.

இந்த வருட தீபாவளி

பட்டாசில்லை, புகையில்லை. அமைதியாகக் கழிந்தது தீபாவளி.

அடுத்த வீட்டுக் கதையில் மூக்கை நுழைக்கும் ஆசாமிகள்

பக்கத்து வீட்டம்மணியின் குணாதிசயம் இப்படித்தான். ஆரம்ப காலத்தில், அவருக்கு எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை என வியந்து, அவருக்குத் தேவையான விவரங்களை நாங்கள் வெள்ளந்தியாகச் சொல்லியிருக்கிறோம். சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிகிறது, அவரது பண்பே இப்படித்தான் என்று. அவரைப்பற்றி ஓரளவுக்கு நாங்கள் புரிந்துகொண்ட பிறகு, தவிர்க்க ஆரம்பித்துவிட்டோம். இருந்தாலும், குழந்தைகள் மூலமாக அவருக்குத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார். அவரது மகள்கள் இருவருமே அவரைப்போலவே வருகிறார்கள் என்பது வேறு கதை.

பாடம்

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ சீக்கிரமே நட்பாகிவிட்டோம். ஒன்றாகவே படிப்பது, சாப்பிடுவது, நம்பர் ஒன் போவது என பள்ளியில் எப்போதும் சேர்ந்தே இருப்போம். ஆனால், அது பள்ளியின் பிரதான வாயில் தாண்டி வெளியே கடந்து வந்ததில்லை. வாசலின் இடதுபுறம் நான் திரும்பிவிட, அவன் வலதுபுறம் திரும்பி அவனுடைய வீட்டுக்குச் சென்றுவிடுவான்.

எழுதுகிறேன் ஒரு கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம்:

அன்புள்ள ஞானகுரு,

பதிலில்லா அழைப்புகள்

அன்புள்ள சீனு,

நமது முதல் சந்திப்பைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் மகனை அழைத்து வந்ததற்கான காரணம் ஒன்றைச் சொன்னேன், நினைவிருக்கிறதா? அந்தக் காரணத்தை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அந்தக் காரணம் கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது, இல்லை?

அமெரிக்கா சென்றதும் கொம்பு முளைச்சிருச்சா என்றெல்லாம் நினைக்கவில்லை. நீங்கள் இந்தியாவில் இருக்கும்போது எந்த அளவுக்கு தொலைபேசி அழைப்புக்கு மறுமொழி செய்வீர்கள் என்பதை நான் அறிவேன். அது தவிர, நான் ஏற்கனவே சொன்னபடி ஷிப்டில் வேலைக்குச் செல்பவர்களை நான் எப்போதும் தொந்தரவு செய்யமாட்டேன். அப்பா மில்லில் வேலை பார்த்தவர். டே ஷிப்ட், ஆப் நைட், புல் நைட் என்று மூன்று விதமான ஷிப்டுகள். ஒவ்வொரு வாரமும் மாறி மாறி வரும். நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வந்து பகலில் உறங்குவார். பார்க்கையில் பாவமாக இருக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்திருந்தேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. என்னுடைய எண் அவருக்குத் தெரியும். நான் பொதுவாக ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை என்றால், மீண்டும் அழைக்கமாட்டேன். அவருக்குத் தெரிந்திருக்கும், அவர் மீண்டும் அழைக்கட்டும் என்று விட்டுவிடுவேன். ஆனால், அந்த நண்பர் என்னை அழைக்காதது மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னை யாராவது அழைத்து, எடுக்க முடியாமல் போனால் நான் மீண்டும் சம்பந்தப்பட்டவரை அழைத்துவிடுவேன். ஆனால், இந்த விஷயம் மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கே தெரியும், நான் யாரையும் விஷயம் எதுவும் இல்லாமல் அழைக்கமாட்டேன். அந்த நண்பர் ஒரு அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அது குறித்து தனிப்பட்ட முறையில் பாராட்டவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அழைத்திருந்தேன். பரவாயில்லை.

இதேபோல், மனைவியின் தோழி ஒருவர் இருக்கிறார். எப்போது அழைத்தாலும் எடுக்கமாட்டார். புத்தகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்கு முன் அழைத்திருந்தோம், அவர் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தோம், அப்போதும் எடுக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பினோம், அதற்கும் பதில் இல்லை. சரி, அவர் வேறு ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்று விட்டுவிட்டோம். மீண்டும் ஒரு வாரம் கழித்து அழைத்தோம். அப்போதும் எடுக்கவில்லை. மீண்டும் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று இடைவெளி விட்டு அழைத்தோம். பதில் இல்லை. அதன்பிறகு, ஒரு பத்து நாட்கள் கழித்து அழைத்தார். இத்தனை நாட்கள் அழைத்தும் பதில் அளிக்காதது ஏன் என்று சற்றுக் காரமாகவே கேட்டுவிட்டார் மனைவி. மனைவியின் இயல்பு உங்களுக்கே தெரியும், அவர் எத்தனை மென்மையாகப் பேசுவார் என்று. அவரையே கோபப்பட வைத்திருக்கிறது இந்த பதிலில்லா அழைப்புகள். புத்தகத்தைக் கொடுத்தபிறகு நாங்கள் அந்தத் தோழியை அழைப்பதே இல்லை. ஏதேனும் வேண்டுமென்றால், அவரே அழைப்பார். அவ்வளவுதான்.

நாள் ஒன்றின் பெரும்பாலான நேரத்தை, அலுவல் பணிகளில் செலவிடுகிறீர்கள் என்பது வருத்தம்தான். ஆனால், சனி, ஞாயிறுகளில் வேலை இருக்காது, அல்லவா? சரி, அந்த நேரத்தையாவது மனைவிக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவிடவும். டிரம்பின் புதிய கொள்கையால் உங்களுக்கும், அங்கு வசிக்கும் சக நண்பர்களுக்கும் பணி விஷயத்தில் சற்று சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியா? இது தவிர, இப்போது ஐ.டி. துறையில் பலர் வேலையை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்களாமே? இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நேரமிருப்பின் விளக்கவும்.

கடந்த வாரம், நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். உங்களது வலைப்பதிவின் இணைப்பின் மூலமாகத்தான் வந்திருந்தார். என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு, சிலவற்றைப் பாராட்டினார். ‘பாஸ், அந்த கேரக்டரை சரியா வார்த்தையால விளக்குறீங்க. உங்க எழுத்தைப் படிக்கப் படிக்க, அந்தக் கேரக்டர் கூடவே பயணிக்கிற மாதிரியே இருக்கு’ என்றிருந்தார். எனக்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. ஆனாலும், இது போன்ற பாராட்டுகள்தானே நம்மை மேலும் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருக்கும்? இந்தப் பதிவை அவர் படித்தால், இதையெல்லாம் ஏன் இவன் பதிவில் எழுதுகிறான் என்று எண்ணக்கூடும். பரவாயில்லை.

முகநூலில் ‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ என்றொரு போட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது, நாம் நம் மனம் விரும்பும் ஒரு நபருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமாம். யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம், எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இருநூறு வார்த்தைகளில் எழுதச் சொல்லியிருக்கிறார்கள். நானும் கலந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். இதுவரை வெளிக்கொணராத, வேறு ஒரு நபருக்கு கடிதம் எழுதலாம் என்றிருக்கிறேன். வலைப்பதிவுகள் வெகு ஜோராகப் போய்க்கொண்டிருந்த சமயம், நீங்கள் ஒரு கடிதப்போட்டி நடத்தினீர்கள், அல்லவா? அப்போதுதான், எனக்கு பதிவர்கள் பலரையும் அறிமுகம் கிடைத்தது. முந்திரிக்கொட்டை போல கடிதம் எழுதியவர்களுக்கெல்லாம் பாராட்டியும், குறை கூறியும் பின்னூட்டம் இட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

நாம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவோம். நிறைய பேசுவோம்.


பேசுவோம்.

அஃறிணை

செந்நிற நாயொன்று தெருவோரக் குப்பைத்தொட்டியைக் கிளறிக்கொண்டிருந்தது. குப்பைத்தொட்டி முழுவதும் நிறைந்திருந்ததால், அந்த நாயால் சுலபமாக மேலே ஏறி நிற்க முடிந்திருந்தது. காலியாக இருந்திருந்தால், உள்ளே என்ன இருக்கிறது என்றுகூடத் தெரியாமல் போயிருக்கும். தவிர, உள்ளே குதித்த அந்த நாய் வெளியேற வழியின்றித் தவித்திருக்கும். பரவாயில்லை, நாய்களுக்கும் நம்மைப்போல மூளை இருக்கிறது. இங்கே நம்மைப் போல என்று நான் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். உங்களைப் போல என்று என்று குறிப்பிட்டு, என்னைத் தனித்துக் காட்டியிருக்கவேண்டும். ஏனென்றால், இந்தத் தெரு முழுவதும் என்னை தனித்துத்தான் பார்க்கிறார்கள்.

மாரியப்பன் மாமா

நேற்று வண்டி பஞ்சர் ஆகிவிட்டது. முக்கியமான வேலை இருந்ததால், வீட்டிலிருந்து ஆட்டோவில் சென்றாயிற்று. வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அக்கடா என்று ஒரு அரை மணி நேரம் படுக்கவேண்டும் போல் இருந்தது. காரணம், வெயிலும் அலைச்சலும். இதுதவிர, கடை வீட்டுக்கு அருகில்தான் என்றாலும் உச்சி வெயிலில் வண்டியைத் தள்ளிக்கொண்டு நடத்தல் என்பது மிகக்கடினம். ஆக, வண்டியை மாலையில் பஞ்சர் பார்ப்பதற்கு எடுத்துச் செல்லலாம் என்று விட்டுவிட்டேன்.

மயிரு...!

ஓரிரு ஆண்டுகளுக்கு முன், முகச்சவரம் செய்யும்போதுதான் தென்பட்டது அந்த ஒற்றை வெள்ளை முடி. கிருதாவினுள் பயிர்களுக்கிடையே வளர்ந்திருந்த களைபோலத் தெரிந்தது. மற்ற முடிகள் விலகியிருந்ததாலும், இந்த முடி சற்று நீளமாக, தடிமனாக இருந்தாலும் சட்டென்று கண்களில் தென்பட்டுவிட்டது. அந்த முடியை மட்டும் இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு ஒரு இழு இழுத்தால் கையேடு வந்துவிடும். ஆனால், வெள்ளை முடியைப் பிடுங்கினால் அது பக்கத்து முடிகளுக்கும் பரவும் என்று மற்றவர்களால் சொல்லப்படும் கூற்றுக்களால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மேலும், கிருதாவை இழுக்கும்போது ஏற்படும் வலியை பலமுறை எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் உணர்த்தியிருக்கிறார். ஆகவே, கண்ணாடியில் பார்த்து கத்தரிக்கோலால் அடி முடிவரை வெட்டிவிட்டேன். அதை வெட்டும்போது நான்கைந்து கறுப்பு முடிகளும் சேர்ந்து வெட்டப்பட்டன என்பது உபரித் தகவல். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் முகச்சவரம் செய்யும்போது அந்த வெள்ளை முடியைத் தேடிப்பிடித்து வெட்டுவது வழக்கமாகிவிட்டது.

சில நாட்களுக்குப் பிறகுதான் கவனித்தேன். மீசையிலும் இதேபோன்று ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. கட்டியாய், கருகருவென்று வளர்ந்திருக்கும் மீசைக்கிடையே ஒற்றை ஆளாய் அந்நியப்பட்டிருந்த அந்த வெள்ளை முடியை தயவு தாட்சண்யம் இன்றி வெட்டவேண்டியாதாயிற்று. இருக்கட்டும். சில நாட்கள் கழிந்தபின், இன்னொரு புறத்திலும் மீசையில் ஓர் வெள்ளை முடி எட்டிப்பார்த்தது. அடுத்தடுத்த சில நாட்களில், தலையிலும் ஆங்காங்கே வெள்ளி முடிகள் தென்படத் தொடங்கின.

கொஞ்சம் கலக்கம் வர ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் எல்லா முடிகளும் வெளுத்து, பார்ப்பதற்கு வயது முதிர்ந்தவன் போலத் தோற்றமளிப்பேனே என்ற எண்ணமும் வரத் தொடங்கியது. முடிக்கு சாயம் பூச வேண்டிவருமோ என்ற கலக்கம் வேறு. ஒரு முறை சாயம் பூசிவிட்டால், இருக்கும் அனைத்து முடிகளும் வெளுத்துவிடும் என்று பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முடிச்சாயம் பயன்படுத்தும் நண்பர்கள் கூறிக் கேட்டதுண்டு.

இன்னும் சில நாட்கள்தான். இந்த பயத்திலேயே இருந்த எனக்கு தலைமுடி உதிர்வும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னைத் தண்ணீரின் வீரியத்திற்கு என்னுடைய தலை மயிர்க்கால்கள் தங்களது பலத்தை இழக்கத் தொடங்கிவிட்டன. இப்படி இழந்து இழந்து, தற்போது தலைமுடி அடர்த்தி குறைந்து, லேசான சொட்டை தென்படத் தொடங்கிவிட்டது. இந்த முடிக்காக இவன் இப்படி மாங்கு மாங்கென்று எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? இருபது, முப்பது வயதிலேயே முழு மொட்டையாக அலையும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறதா? முதன்முதலில் தங்களுக்கு வரும்போது அவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டே இருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்திற்கும், இப்போதுள்ள புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் அழுகையாக வருகிறது. அவ்வை சண்முகியில் நாகேஷ் கேட்பது போல், “உசுரா போச்சு, மசுருதானே போச்சு” என்று விட்டுவிட மனம் வரவில்லை.

இந்த முடி கொட்டுதலும், இருக்கும் முடிகளின் நரைத்தலும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு படத்தில் விவேக் சொல்வார், “காதோரம் ஒயிட் வந்தால் டிக்கட் வாங்கப்போறான்னு அர்த்தம்” என்று. அது என்னவோ சரிதான். இன்றுடன் அகவை முப்பத்தேழு முடிகிறது. கிட்டத்தட்ட வாலிபன் என்னும் நிலையிலிருந்து, நடுத்தர வயதினன் என்னும் நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. கல்லூரியில் படிக்கும் பெண்கள் அண்ணா, அண்ணா என்று அழைத்த காலம் போய், அங்கிள் அங்கிள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பரவாயில்லை, வயது வித்தியாசம் பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.

இந்த முப்பத்தேழில் என்ன சாதித்திருக்கிறேன் என்றால், மிகப்பெரிய ‘எதுவுமில்லை’ என்ற ஒற்றை பதிலைத் கூறுவேன். காரணம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். இப்போது வேலையில் இல்லை. முப்பத்து ஏழில் வேலையை விட்டுவிட்டு எனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கியிருக்கிறேன். இது மிகமிகத் தாமதமானது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த முடிவை நான் எப்போதோ எடுத்திருக்க வேண்டும். எனக்கு இதுவரை எந்த லட்சியமும் இருந்ததில்லை. சிறு வயதில் என் லட்சியம் என்னவென்று கேட்டால் என்னுடைய பதில் மருத்துவராக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அது எல்லாரும் சொல்கிறார்களே என்று நானும் கூறியதுதான்.

நான் எடுத்திருக்கும் முடிவு பலருக்கும் வியப்பான விஷயமாக இருந்தாலும், எனக்கும் உள்ளுக்குள் பயத்தை மறைத்த வடிவேலுவின் மனநிலையே இருக்கிறது. நான் விரும்பும் விஷயத்தில் சாதிப்பதற்காக முழு முயற்சியுடன், தன்முனைப்புடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இதுவரை யாரிடமும் பொருளாதார ரீதியான உதவியை எதிர்பார்க்கவில்லை. கொடுத்துத்தான் பழக்கம். உதவி என்று மற்றவர்களிடம் நான் கையேந்தி நிற்கும் நிலைக்கு கடவுள் என்னைத் தள்ளிவிடவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், உதவும் உள்ளம் கொண்டுள்ளவர்கள் என்ன செய்கிறாய், பணம் வேண்டுமானால் கேள் என்று கேட்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.


எழுத்தின் மூலம் என்னை நானே அவ்வப்போது சோதித்துக்கொள்கிறேன்,  உணர்ந்துகொள்கிறேன். உங்கள் பின்னூட்டங்கள் என்னைப் பண்படுத்துகின்றன. என் எழுத்துக்களை மெருகேற்றுகின்றன. என்னையும் என் எழுத்துகளையும் மேம்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக சமூக வலைத்தளங்களை நான் பார்த்துவருகிறேன். இந்தப் பிறந்த நாளில் வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கும், வாழ்த்தவிருக்கும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.