நான் எப்போதும் அலுவலகத்துக்கு என் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில்நிலையம் வரை மட்டுமே. ரயில்நிலையத்திலிருக்கும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து முண்டகக்கண்ணியம்மன் கோவில் வரை ரயில் பயணம். அங்கிருந்து ஐந்து நிமிட நடை. அவ்வளவே. ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிடலாம். ஏதாவது வெளிவேலை இருப்பின் வண்டியை எடுத்துச் செல்வதுண்டு. இப்படித்தான் கடந்த புதன்கிழமை ஒரு சொந்த வேலையாகவும் வியாழனன்று பதிவர் துளசிதரன் இயக்கிய குறும்படம் வெளியீடு இருந்ததாலும் வெள்ளியன்று தி.நகரில் ஒருவரை சந்திக்க இருந்ததாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் வண்டியிலேயே வரவேண்டியதாயிற்று. இப்படி தொடர்ச்சியாக வந்ததில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டேன்.