பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2

பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2










நண்பகல் 12 மணிக்கு ஓடத்துவங்கிய படகு இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது.   இடையே சிக்கன் கடையில் மட்டுமே கொஞ்ச நேரம் நிறுத்தினார்கள்.  படகை நிறுத்துவது நம்முடைய விருப்பம் என்றாலும் நாங்கள் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை.  மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு உணவு இடைவேளை என்பதால் அந்த நேரம் மட்டும் ஓரம் கட்டிவிட்டார்கள்.  அந்த நேரத்தில் நாங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளை ஒரு ரவுண்ட் அடித்தோம்.  ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.  இதே சென்னை என்றால் அங்கேயே காலி செய்து விடுவார்கள்.








பின்னர் மீண்டும் ஓடத்துவங்கிய படகு ஓடிக்கொண்டே இருந்தது.  எங்கெங்கு காணினும் தண்ணீர், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் என அருமையாக இருந்தது.  வாகனங்கள் இல்லை, புகை இல்லை, இரைச்சல் இல்லை, அவ்வளவு அமைதி.  எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிக மிக உற்சாகமாக உணர்ந்தோம்.








மாலை ஆறு மணி வரை மட்டுமே படகுகள் ஓடுவதற்கு அனுமதி உண்டு என்பதால் ஆறு மணிக்கு ஏதோ ஒரு ஊரில் படகை நிறுத்திவிட்டார்கள்.  இஞ்சின் அணைக்கப்பட்டது.  படகுக்கு வேண்டிய கரண்ட் அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது.  விசாரித்ததில் அது படகு ஓனரில் வீடாம்.  இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை சுற்றிப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம்.








அழகான கிராமம். குறைந்த அளவிலே வீடுகள்.  அமைதியான சூழ்நிலை. வாகனங்கள் இல்லை.  நீரப்பரப்பை கடக்க ஒரு பெரிய பாலம்.  அனைவரும் நடந்தே செல்கிறார்கள்.  மறு கரையில் ஒரு பெரிய சர்ச்.  மாலை வேளை என்பதால் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது.  நான் எடுத்த புகைப்படங்கள் கீழே...




சர்ச்.. பின்னணியில் நிலா




பாலத்திலிருந்து



நெடுஞ்சாலை போலச் செல்லும் நீர்ப்பாதை




படகு, தென்னைமரங்கள், பின்னணியில் நிலா




கொஞ்சம் இருட்டியதும்




சந்திரன்



அந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது.  ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது.  இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள்.  உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.




உள்ளூர் பஸ் ஸ்டாப்



இரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது.  ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம்.  (போட்டோ எடுக்கலையே!)



கொசுக்கடி அதிகம் இருந்தது.  அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம்.  ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம்.  மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம்.  படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.








காலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள்.  அருமை.  கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது.  ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள்.  இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது.  பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது.  பின்னர் சூடான காபி.  நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது.  காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.








நாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.















படகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால் படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.







கட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.  என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.

நன்றி

ஸ்கூல் பையன்...


பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 1

பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 1





கேரளா என்றதும் நம் நினைவுக்கு வருவது தென்னை மரங்களும் பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பும் தான்.  சிலருக்கு நீண்ட கூந்தலுடைய பிகர்கள் தான் நினைவுக்கு வரும் என்பது வேறு விஷயம்.  இந்தப் பசுமையான நிலப்பரப்பில் படகு சவாரிக்கென்றே ஒரு நீர்ப்பரப்பு இருப்பது பலருக்கு தெரியாது.  கொச்சின் (எர்ணாகுளம்) முதல் கொல்லம் வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தை இந்த நீர்ப்பரப்பு இணைக்கிறது.  இந்தப் பகுதியில் சுமார் 24 மணிநேரம் படகு சவாரி செய்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.









படகு சவாரிக்கென்றே டூர் ஆப்பரேட்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  அவர்களில் நாங்கள் தேர்ந்தெடுத்தது லேக்ஸ் & லாகூன்ஸ் (Lakes & Lagoons) என்ற ஆப்பரேட்டரைத்தான். நாங்கள் என்பது ஐந்து பேர்.  சென்னையில் இருந்து நாங்கள் முன்னரேயே தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்து வைத்துக் கொண்டோம்.  இதற்காக அவர்கள் பணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை.  நாங்களாகத்தான் அவர்களுடைய வங்கி கணக்கு எண் சொன்னால் பணத்தை டெப்பாசிட் செய்து விடுகின்றோம் என்று சொன்னதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள்,  வரும்போது கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.  நாங்கள் ஐந்து பேர் என்பதால் எங்களுக்கு இரண்டு படுக்கையறை கொண்ட படகு முன்பதிவு செய்யப்பட்டது.







சென்னையில் இருந்து ஒரு சுபதினமான வெள்ளிக்கிழமையன்று இரவு 8.45 மணிக்கு புறப்படும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டோம்.  காலை 10.45 மணிக்கு சென்றடைய வேண்டிய ரயில் அரை மணிநேரம் தாமதமாகவே சென்றது.  ரயில் பயணம் ஒன்றும் அத்தனை சுவாரஸ்யம் இல்லை.  காலை அலுவலகத்துக்குச் செல்லும் மக்கள் திருச்சூரில் மளமளவென்று முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்து எங்களையும் தள்ளி உட்காரச்செய்தார்கள்.  இந்தப்பிரச்சனை எர்ணாகுளம் வரை மட்டுமே.  எர்ணாகுளம் வந்ததும் அனைவரும் இறங்கிக்கொண்டார்கள்.








காலை 11.15 மணிக்கு ஆலப்புழை ரயில் நிலையம்.  அங்கிருந்து படகுத்துறைக்கு 57 ரூபாய் ஆட்டோ கட்டணம்.  நாங்கள் ஐந்து பேர் என்பதால் இரண்டு ஆட்டோக்களை எடுத்துக்கொண்டோம். சுமார் பதினைந்து நிமிடத்தில் படகுத்துறை அடைந்தோம்.  படகுத்துறையின் அருகிலேயே டூர் ஆப்பரேட்டர்களின் அலுவலகமும் உள்ளது.  அங்கு சென்று எங்களது பெயர் மற்றும் முகவரியைக் கேட்டார்கள். புகைப்படச் சான்று ஒன்றை வாங்கி அதன் நம்பரை எழுதிக்கொண்டார்கள்.  சவாரிக்கான மொத்த பணத்தையும் முன்னரே வாங்கிக்கொண்டார்கள்.  அதிகமில்லை, 11,000 மட்டுமே.  அவர்களுடைய‌ கிரெடிட் கார்ட் மிஷின் வேலை செய்யாததால் மொத்தப்பணத்தையும் ரொக்கமாகவே கேட்டார்கள்.  நாங்கள் அனைவரும் எங்களுடைய பர்ஸில் இருந்த மொத்தப்பணத்தையும் எடுத்துக்கொடுத்தோம், அதில் மொத்தம் 11,000 மட்டுமே இருந்தது.  எங்களுடன் வந்த நண்பர் ஒருவர், "டேய் என்னடா போற வழியில் செலவுக்கு என்ன செய்ய?" என்றார். அதற்கு நான், "டிரிப் முடியுற வரைக்கும் தண்ணிக்குள்ள (அந்தத் தண்ணி இல்லை) இருக்கப்போறோம், என்ன செலவு இருக்கப்போவுது, நாளைக்கு ரயில்வே ஸ்டேஷனில் போய் எடுத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டேன்.  இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த அலுவலக ஊழியர் ஒருவர், "இட்ஸ் ஓகே சார், போற வழியில் ஏடிஎம் இருக்கு, பணம் எடுக்கலாம்" என்றார்.  போற வழியில ஏடிஎம்‍‍-மா, எப்படி என்று யோசித்துக்கொண்டே படகு நோக்கி கிளம்பினோம்.






படகுக்கு செல்லும் பயணிகள்


படகு என்றால் நான் கூட ரொம்பச் சின்னதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.  உள்ளே ஏறியவுடன் பெரிய லாபி.  ஓட்டுநர் அமர்ந்து படகை செலுத்துவதற்கு ஒரு இடம், அதன் பின்னால் பெரிய சோபா செட்டுகள், டைனிங் டேபிள், டிவி, வீடியோ பிளேயர் என அனைத்து வசதிகளும் இருக்கின்றன.  







நாங்கள் படகில் ஏறியதும் எங்களை அந்த அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் வரவேற்றார், குடிப்பதற்கு வெல்கம் டிரிங்க் என்று சொல்லி இளநீர் கொடுத்தார், படகு சவாரி பற்றி விளக்கமாக ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் அந்தப் படகில் எங்களுடன் பயணிக்கப்போகும் மூன்று பேர் அதாவது ஒரு ஓட்டுநர், ஒரு சமையல்காரர் மற்றும் இஞ்சினியர் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.  பின்னர் அவர் கிளம்பிவிட்டார்.  அவர் கிளம்பியதும் படகில் இருந்த கட்டுகள் அவிழ்க்கப்பட்டன, படகின் இஞ்சின் இயக்கப்பட்டு கிளம்பத்தொடங்கியது.





படகை செலுத்தும் ஓட்டுநர் ஷோபன்


பெரிய லாபி ஒன்று, அதைத் தாண்டியவுடன் ஒரு சிறு சந்து செல்கிறது அருகிலேயே லைப் ஜாக்கெட் வைத்திருக்கிறார்கள்.  பக்கவாட்டில் ஒரே மாதிரியான‌ இரண்டு படுக்கை அறைகள், இரண்டிலும் குளியலறை கழிப்பறை வசதி, பின்னால் சமையல் அறை ஒன்று.  மேலே மாடி ஒன்று அங்கும் சோபா செட் போட்டு அழகாக வைத்திருக்கிறார்கள்.  மேல்மாடியை பிளாஸ்டிக் திரை போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் திறந்துகொள்ளலாம். மாடியிலிருந்து பார்க்கும்போது நீர்ப்பரப்பு அழகு.




சந்து, லைப் ஜாக்கெட்கள்





படுக்கையறை





மேல் மாடி





சுமார் 200 மீட்டர் அகலம் கொண்ட நீர்ப்பாதை ஒரு மிகப்பெரிய ஆறுபோல் காணப்படுகிறது.  ஆனால் நீரோட்டம் இல்லை, குட்டை மாதிரி இருக்கிறது.  நாங்கள் அன்று காலை பல் மட்டுமே தேய்த்திருந்தோம், அதனால் காலைக்கடன்களை படகிலேதான் முடித்தோம். வெஸ்டர்ன் டாய்லெட், ஷவர் என்று எல்லா வசதிகளும் இருந்தது.  ஆனால் தண்ணீர் தான்... கக்கா போய்விட்டு ஃப்ளஷ் செய்வதும் அதில் தான், குளிப்பதும் அதில் தான், வாஷ் பேசினில் வரும் தண்ணீரும் அதுவேதான்.









நேரம் ஆகிவிட்டிருந்ததால் ஒரேய‌டியாக மதிய உணவு சமைத்துத் தருவதாக சொன்னார்கள்.  நாங்களும் சரியென்றோம்.  சுமார் 2.30 மணிக்கு சாப்பாடு தயாராக இருந்தது.  நம்ம ஊர் பச்சரிசி சாதம், சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, இரண்டு வகை பொரியல் மற்றும் பொரித்த மீன், குடிப்பதற்கு மினரல் வாட்டர்.  நான்வெஜ் வேறு எதுவும் வேண்டுமென்றால் நம்மை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறார்கள். இனிமே எப்படி வாங்கிக் கொடுப்பது என்றால் போற வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.   அதேபோல் ஒருபக்கம் படகை ஓரம் கட்டினார்கள்.  அங்கே சுமார் ஐந்தாறு கடைகள் இருந்தன.  சிடி கடை, இறைச்சிக் கடை, பெட்டிக்கடை, பிஸ்கெட், சிப்ஸ் விற்கும் கடை என்று எல்லாம் இருந்தது.









இறைச்சிக்கடை
 


நாங்கள் வந்த படகு தென்னை மரத்தில் கட்டப்பட்டுள்ளது


இரவு உணவு மெனுவில் சிக்கன் இருந்த‌தாலும் இங்குள்ள கடைகளில் மிகவும் விலை அதிகமாக இருந்ததாலும் நாங்கள் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை.  படகில் கொடுத்த மதிய சாப்பாட்டைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  ஒவ்வொன்றும் அருமை. என்ன காரம்தான் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் நாங்கள் ஐந்து பேரும் அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம்.   இயற்கை அழகை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது ஒரு வித்தியாசமான அனுபவம்.



மாலை ஐந்து மணிக்கு சுடச்சுட பக்கோடாவும் டீயும் கொடுத்தார்கள்.  மிகவும் மிருதுவாக எண்ணெய் அதிகம் குடிக்காத பக்கோடா சாப்பிடுவதற்கு அருமை.  நல்ல சூட்டில் டீ குடித்தது அதைவிட அருமை.




பக்கோடா











பதிவு மிகவும் நீளமாகச் செல்வதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.  மேலும் ஆலப்புழை தகவல்கள் மற்றும் படங்கள் நாளை...

நன்றி

ஸ்கூல் பையன்.