ஹரிதாஸ் -‍ சினிமா விமர்சனம்

ஹரிதாஸ் -‍ சினிமா விமர்சனம்





இந்தியாவில் எண்பத்தெட்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆட்டிசம் என்ற குறைபாட்டுடன் குழந்தை பிறக்கிறதென்று ஒரு மனதை உறைய வைக்கும் புள்ளிவிபரத்தை படத்தின் இறுதியில் சொல்கிறார்கள்.  இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது, ஒருவர் கொடுக்கும் கட்டளைகளை அவர்களது மூளை ஏற்றுக்கொள்வதில்லை, அப்படியே ஏற்றுக்கொண்டாலும் மூளை பதில் கட்டளை கொடுப்பதில்லை என்பதையும் காட்சிகளின் மூலம் நமக்கு விளங்க வைக்கிறார்கள்.  நம்ம ஸ்கூல் பையன் படிக்கும் பள்ளியிலும் நானும் நிறைய குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.  நான் அவர்களைப் பார்க்கும்போது அப்போதைக்கு ஒரு உச் மட்டும் கொட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதற்கு நடையைக் கட்டுவது வழக்கம்.  ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தபிறகு அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களுடைய உலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.







கிஷோர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.  கமிஷனரின் உத்தரவுக்கு இணங்க தனக்குக் கீழ் நான்கைந்து போலீஸ்காரர்களை வைத்து என்கவுண்டர் செய்கிறார்.  இவரது மனைவி ஆட்டிசம் குறைபாட்டுடன் ஒரு ஆண் குழந்தையை (ஹரி) பெற்றெடுத்துவிட்டு இறந்துபோக அந்தக் குழந்தையை ஊரில் உள்ள தனது தாயிடம் விட்டுவிட்டு சென்னையில் என்கவுண்டர் வேலையைத் தொடருகிறார்.  ஹரிக்கு பத்து வயதே நிரம்பியுள்ள நிலையில் திடீரென்று ஒருநாள் கிஷோரின் தாய் இறந்துவிட, அவனை தானே எடுத்து வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு கிஷோர் தள்ளப்படுகிறார்.  ஒரு பக்கம் கடமை இன்னொரு பக்கம் மூளை வளர்ச்சியில்லாத மகன்.  லீவ் எடுத்துக்கொண்டு மகனைப் படிக்க வைக்கிறார்.  டீச்சராக சினேகா.  அவரும் அவனை நன்கு கவனித்துக் கொள்கிறார்.







இந்நிலையில் திடீரென்று ஹரி காணாமல் போக அவனுக்கு குதிரையைக் கண்டால் குதூகலமாவதும் தொடர்ந்து ஓடுவதுமாக இருப்பதை கிஷோர் கண்டுபிடித்து விடுகிறார்.  அவனுடைய குறைபாட்டைக் களைய ஹரியை ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஜெயிக்கவைக்க முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயித்தாரா என்பதை கொஞ்சம் என்கவுன்டர், கொஞ்சம் சென்டிமென்ட் என்று கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் குமாரவேலன்.







கொஞ்சம் இந்தப்பக்கம் விலகியிருந்தால் டாகுமென்டரி படமாகியிருக்கும்.  கொஞ்சம் அந்தப்பக்கம் விலகியிருந்தால் ஒரு போலீஸ் படமாகியிருக்கும்.  ஆனால் இரண்டையும் ஒருசேரக் கொடுத்த விதத்தில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார் என்றே கூறலாம்.  படம் என்கவுன்டரில் தொடங்கி இது ஒரு ஆக்சன் படமாக இருக்குகோ என்று நினைக்க வைத்தாலும் அடுத்த காட்சியில் ஹரியின் அறிமுகம் நம்மை உருக வைக்கிறது.  அதிலும் கொட்டும் மழையில் நனைந்தபடியே உணர்ச்சியே இல்லாமல் ஹரி சுவரைப் பார்த்தபடி நிற்பதும், கிஷோர் வந்து என்ன சொல்வதென்று தெரியாமல் அழுவதும் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.







படத்தின் முதல் ஹீரோ இயக்குநர் குமாரவேலன் தான்.  உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை கொஞ்சம் கற்பனை கலந்து ஆக்சன், சென்டிமென்ட் என்று சரிவிகிதத்தில் கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.  ஒரே ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப்பொட்டு.  அடுத்த ஹீரோ சந்தேகமேயில்லாமல் ஹரியாக நடித்திருக்கும் பிரித்விராஜ் தாஸ் தான்.  குழந்தைகளையும் சிறுவர்களையும் நடிக்கவைப்பது மிகவும் கடினம்.  அதிலும் இந்தமாதிரியான உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பது என்பது மிக மிகக் கடினம்.  இதில் நடித்த இந்தப்பையனைப் பாராட்டுவதா அல்லது செவ்வனே வேலை வாங்கிய இயக்குநரைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.







கிஷோர் முறுக்கு மீசையுடன் இறுக்கமாக இருக்கிறார்.  அவருடைய கண்களாகட்டும் உடல் மொழியாகட்டும், போலீஸாக கோபத்தையும் அதே சமயத்தில் தன் மகனை சாதிக்கவைக்க வேண்டும் என்று உருகும்போது பரிதாபத்தையும் காட்டுகின்றன.  ஆனால் அவரது குரல் உச்சரிப்பு ஏதோ ஒரு மாதிரியாக கஷ்டப்பட்டு தமிழ் பேசுகிறார்.  கொஞ்சம் திருத்திக்கொண்டால் தேவலாம்.  தன் மகனுடன் தானும் வகுப்பறையில் அமர்ந்துகொள்வதும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதும் பாடம் நடத்தும்போது சினேகா வெட்கப்படுவதை அறிந்ததும் அவர் காட்டும் ரியாக்ஷன் செம.







ரொம்ப நாளைக்குப் பிறகு சினேகா. தன் பங்குக்கு இயல்பாகவும் நேர்த்தியாகவும் செய்திருக்கிறார்.  ஹரி காணாமல் போனதும் பதட்டப்படும் காட்சியிலேயே கலக்கிவிடுகிறார்.  அவரது அம்மாவாக வருபவர், தங்கை, பள்ளியின் ஹெச் எம் மாக வரும் அந்தப் பெண், பள்ளியில் உடன் படிக்கும் பையன்கள், டாக்டராக வரும் யூகி சேது, கோச்சாக வரும் இயக்குநர் ராஜ்கபூர், கிஷோரின் உறவினராக வருபவர்கள் என்று ஒவ்வொருவரும் நல்லவிதமாகச் செய்திருக்கிறார்கள்.







இசை விஜய் ஆண்டனி.  "வாழ்க்கையே உந்தன் கையில்" ம‌ற்றும் "அன்னையின் கருவில்" பாடல்கள் அருமை.  பின்னணி இசை உறுத்தவில்லை.  ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை.  இந்த மாதிரியான குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படமாக இருப்பது மகிழ்ச்சி.  எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அழுவது உறுதி.  மொத்ததில் ஒரு ஆக்சன் சென்டிமென்ட் படம் பார்த்த திருப்தி.



நன்றி...

வெரைட்டி - 09.02.2013

வெரைட்டி - 09.02.2013



வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரிப்போர்ட்ட‌ராக‌ ப‌ணிபுரியும் திரு.தீப‌ன் என்ப‌வ‌ர் என‌க்கு போன் செய்திருந்தார்.  ஆல‌ப்புழை ப‌ற்றிய‌ மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ளை கேட்டுத் தெரிந்துகொண்டார். ஆஹா ந‌ம்ம‌ சைட்டை பார்த்துகூட‌ ம‌க்கள் போன் செய்கிறார்க‌ளே என்று மிக‌வும் ம‌கிழ்ந்தேன்.



வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் ஸ்கூல் பையனின் வலைப்பூவுக்கு ஹிட்ஸ் கன்னா பின்னாவென்று எகிறி வருகிற‌து.  வெறும் ஆறு பதிவுகளே எழுதியுள்ள நிலையில் தற்போதுவரை 1500 ஹிட்ஸ் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  அறிமுகப் படுத்திய "திடங்கொண்டு போராடு" சீனுவுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி.  துப்பாக்கி சினிமா விமர்சனம் அதிகம் பேரால் படிக்கப்பட்டிருந்தாலும் அனைவரின் பேவரிட் ஆலப்புழை பற்றிய கட்டுரைகளே என்பது பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது.  கடல் படத்தில் ஆலப்புழை காட்சிகள் சில வருகின்றன என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.  படம் பார்ப்பதற்கு இஷ்டமில்லையென்றாலும் நான் சென்று வந்த இடமென்பதால் பார்க்க ஆவலாக இருக்கிறது.  கடுமையான வேலைப்பளு காரணமாக என்னால் அதிகம் எழுத முடியாவிட்டாலும் தினம் தினம் வரும் வலைப்பூ பார்வைகளும் பின்னூட்டங்களும் என்னை மிகவும் உற்சாகப் படுத்துகின்றன. 









நான் எழுதிய பின்னூட்டங்களைப் பார்த்து மின்னல் வரிகள் பாலகணேஷ் போன் செய்தார்.  கமெண்ட் வந்தால் போன் எப்படி சொல்கிறது என்று கேட்டார்.  அது ஒன்றுமில்லை, இன்டர்நெட் இணைப்புள்ள போன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.  பிரபல பதிவரே என்னிடம் போனில் பேசியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.




விஸ்வரூபம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு வழியாக வெளியாகிவிட்டது.  பார்த்தும் விட்டேன்.  படம் மொத்தத்தில் நன்றாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு சில சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  படத்தின் முதல் சண்டைக்காட்சி அதிரடியாக இருக்கிறது.


மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணா சாலை பல நாட்களாக ஒருவழிப் பாதையாகவே உள்ளது.  எல் ஐ சி செல்வதற்கு ஒரு விதத்தில் எளிதாக இருந்தாலும் அங்கிருந்து திரும்பி வரும்போது மிகவும் சிரமமாக உள்ளது.  முக்கியமாக தி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் திக்குமுக்காட வைக்கிறது.  விரைவாக மேம்பாலப் பணிகளை முடித்தால் நலம்.




முகநூலில் ரசித்த படம்





பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.. நன்றி...