ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ சீக்கிரமே நட்பாகிவிட்டோம். ஒன்றாகவே படிப்பது, சாப்பிடுவது, நம்பர் ஒன் போவது என பள்ளியில் எப்போதும் சேர்ந்தே இருப்போம். ஆனால், அது பள்ளியின் பிரதான வாயில் தாண்டி வெளியே கடந்து வந்ததில்லை. வாசலின் இடதுபுறம் நான் திரும்பிவிட, அவன் வலதுபுறம் திரும்பி அவனுடைய வீட்டுக்குச் சென்றுவிடுவான்.