திருமலா திருப்பதி பாதயாத்திரை


திருப்பதி வெங்கடேசப் பெருமாளைப் பார்ப்பது என்பது நாம் நினைத்தவுடன் நடந்துவிடக்கூடிய காரியம் அல்ல
.
பல நாட்களுக்கு முன்பே நாம் போக்குவரத்துக்கும் தரிசனத்துக்கும் டிக்கட் புக் செய்து வைத்தாலும் கடைசி நேரத்தில் போகமுடியாமல் கேன்சல் செய்யப்படும் நிகழ்வுகள்தான் ஏராளம்.

எனது நண்பர் திரு. வெங்கடாசலபதி மாதந்தோறும் திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்று வருகிறார். அதாவது, மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமை மதியம் அல்லது மாலை திருப்பதிக்கு ரயிலில் பயணம். பின்னர் அங்கிருந்து படிக்கட்டுகளில் ஏறிச்சென்று தரிசனம் செய்வது அவரது வழக்கம். திரும்பி வரும்போது பேருந்தில் வந்துவிடுவார். அவர் கேட்டுக்கொண்டதாலும் என்னுடைய வேண்டுதலுக்காகவும் மூன்று முறை அவருடன் பாதயாத்திரை சென்று வந்திருக்கிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று (15.09.2012) நான், திரு
. வெங்கடாசலபதி மற்றும் இன்னொரு நண்பர் திரு சுந்தர் அவர்களுடன் மதியம் 4.30 மணிக்கு சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினோம். சுமார் ஏழு மணியளவில் ரேணிகுண்டா சென்றடைந்தோம். அங்கிருந்து எஞ்சின் மாற்றி (சென்னை முதல் ரேணிகுண்டா வரை எலக்ட்ரிக் அதன் பிறகு டீசல் எஞ்சின்) திருப்பதிக்கு அந்த ரயில் 8.00 மணிக்குமேல் தான் புறப்படும் என்பதால் நாங்கள் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பேருந்தில் கிளம்பினோம். அங்கிருந்து திருப்பதிக்கு 20 நிமிட பயணம் தான்.

பேருந்து நிலையத்திலிருந்து பாதயாத்திரை படிக்கட்டுக்குச் செல்ல ஆட்டோவில் 50 ரூபாய். (ரயில் நிலையத்திலிருந்து என்றால் 40 ரூபாய் மட்டுமே). பாதயாத்திரை தொடங்கும் இடத்திலேயே பூ, பழம், தேங்காய் போன்ற பூஜை பொருட்கள் விற்கிறார்கள். அங்கேயே வாங்கிக்கொண்டு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி படிகளில் ஏற ஆரம்பித்தபோது மணி 8.45.



கீழ் திருப்பதியிலிருந்து மேலே செல்வதற்கு மொத்தம் 3550 படிக்கட்டுகள் ஏறவேண்டும். இளைஞர்கள் என்றால் மூன்று மணி நேரத்தில் ஏறிவிடலாம். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வருபவர்கள் என்றால் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும். மிகவும் வயதானவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.


பாதயாத்திரையாக பெருமாளை தரிசிக்கச் செல்வோருக்கு அனுமதி இலவசம். அதற்கான போட்டோவுடன் கூடிய டிக்கட் ஆயிரம் படிகள் ஏறியவுடன் காலிகோபுரம் என்று அழைக்கப்படும் இடத்தை தாண்டியவுடம் கவுண்டரில் பெற்றுக்கொண்டோம்.


அங்கேயே சாப்பிடுவதற்கென்று நிறைய திறந்தவெளி ஹோட்டல்கள் இருக்கின்றன. நாம் சென்று சொன்னதும் சூடாக சமைத்து தருகிறார்கள். நாங்கள் சாப்பிட்டது மொத்தம் 12 இட்லி, 3 ஆனியன் தோசை மற்றும் 8 போண்டா (கொஞ்சம் ஜாஸ்தியோ?) மொத்தம் 160 ரூபாய் மட்டுமே.


போகும் வழியில் மான் பூங்கா ஒன்று இருக்கிறது. அங்கே நிறைய மான்கள் கம்பி தடுப்புக்குப் பின்னால் இருக்கின்றன. அவற்றுக்கு நாம் பழவகைகள் ஊட்டிவிடலாம். என் நண்பருக்கு அது ஒரு செண்டிமெண்டாகவே இருக்கிறது. அதாவது மான்களுக்கு பழங்கள் ஊட்டவில்லையென்றால் அவர் அந்த முறை தரிசனத்துக்கு படாத பாடு பட்டிருக்கிறார். அதனால், அவர் எப்போதும் மான்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டே செல்கிறார்.




திருமலை தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே இலவசமாக தண்ணீர், குளியல் அறை மற்றும் கழிவறை வசதி செய்து வைத்திருக்கிறார்கள். அனாவசியமாக யாரும் திறந்தவெளியில் "போக வேண்டிய" அவசியம் இல்லை. வழி நெடுகிலும் கடைகள இருக்கின்றன. தண்ணீர், குளிர்பானங்கள், குளுக்கோஸ் மற்றும் பழவகைகள் விற்கிறார்கள்.


நாங்கள் மெதுவாகவே நடந்து சென்றோம். பல இடங்களில் இளைப்பாறிவிட்டுச் சென்றதால் நாங்கள் மலை ஏறி முடிக்கும்போது இரவு 1 மணி ஆகிவிட்டிருந்தது. முன்னரேயே அறைகள் புக் செய்திருந்ததால் அங்கே போய் தூங்கிவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு வி ஐ பி தரிசனத்திற்குச் சென்றோம் (அதற்கும் முன்னரேயே டிக்கட் புக் செய்து விட்டோம்). சரியான கூட்டம் இருந்ததால் பெருமாளைப்
பார்த்துவிட்டு வெளியே வர சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது.
திரும்பி வரும்போது திருமலையிலிருந்து திருப்பதிக்கு பேருந்தில் வந்தோம். ஓட்டுநர் அநாயசமாக மக்காச்சோளத்தை சாப்பிட்டபடியே வண்டி ஓட்டினார். நமக்குத்தான் பயமாக இருக்கிறது.






நண்பர்கள் திருப்பதிக்குச் செல்வதாக இருந்தால் ஒருமுறை பாதயாத்திரை சென்று பாருங்கள். குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் பேருந்திலேயே சென்றுவிடுங்கள். தனியாக ஆண் நண்பர்களுடன் செல்வதாக இருந்தால் நன்றாக இருக்கும்.


படித்துவிட்டு கருத்துக்களைக் கூறவும்.

நன்றி

ஸ்கூல் பையன்.