நூறு வயதுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் ஷாருக் கானின் தாத்தா காலமாகிவிடுகிறார். அவரது அஸ்தியைக் கரைக்க பாட்டியின் அறிவுரைப்படி ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறார்.  கல்யாணம் பிடிக்காமல் ஊரைவிட்டு ஓடிச்சென்ற தமிழ்ப்பெண்ணான தீபிகாவையும், அவரை மீண்டும் ஊருக்கே கூட்டிச்செல்லும் அடியாட்களையும் சந்திக்கிறார்.  சந்திக்கிறார் என்பதை விட அடியாட்களிடம் மாட்டிக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும்.







வேறு வழியின்றி ஷாருக் கானும் தீபிகாவுடன் தீபிகாவின் கிராமத்துக்கே செல்ல நேரிடுகிறது.  தமிழ் தெரியாத ஷாருக் கானும் தானும் காதலிப்பதாக தீபிகா தன் தந்தையிடம் சொல்ல, தந்தையும் மறுப்பு தெரிவிக்க, ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த முறைப்பையனும் சண்டைக்கு வர, நிலவரம் கலவரமாக மாறுகிறது. ஷாருக் அங்கிருந்து தப்பிச்செல்ல, மீண்டும் போலிசாரால் அதே இடத்துக்கு வரவழைக்கப்படுகிறார்.  இந்த முறை தீபிகாவுடன் தப்பிச்செல்கிறார் ஷாருக்.  அதன் பின்னர் அவர்களுக்குள் காதல் எப்படி வந்தது, வில்லன் குரூப் என்ன செய்தார்கள், முடிவு என்ன என்பதை தியேட்டரில் போய் பாருங்கள். 




படத்தின் நாயகன் ஷாருக், படம் முழுவதும் வியாபித்திருக்கிறார்.  கையில் ஆயுதத்துடன் தோன்றும் அந்த முதல் காட்சி முதல் ஆட்டம் ஆரம்பம்.  அதன் பின்னர் ரயிலில் பாட்டு பாடி தீபிகாவிடம் விஷயத்தை வாங்குவதும், ஊரில் மாட்டிக்கொண்டபின் வில்லன்களிடம் வசனம் பேசுவதாகட்டும், தீபிகாவுடனான காதல் காட்சிகளாகட்டும், மனிதர் பின்னுகிறார்.



தீபிகா படுகோன் இந்திப் படத்துக்கேற்றவாறு ஒல்லியாக இருக்கிறார்.  மாராப்பை மறைக்க மறந்தது ஏன் என்று தெரியவில்லை.  நீட்டி நெளித்து தப்புத்தப்பாக இந்தி பேசுகிறார்.  ஷாருக்குடன் ஓடுகிறார், ஆடுகிறார், டூயட் பாடுகிறார்.  





தீபிகாவின் தந்தையாக வரும் சத்யராஜுக்கு வேலையே இல்லை.  கைகளை பின்னால் கட்டிக்கொண்டு விறைப்பாக வந்துசெல்கிறார்.  அவர் அதிகபட்சம் பேசிய வசனம், "என்னம்மா, கண்ணு" அவ்வளவே.  டெல்லி கணேஷ் தெரிகிறார், ஒரே ஒரு காட்சியில் வந்து வசனம் பேசுகிறார்.  மேலும் சில தமிழ் நடிகர்கள் தெரிகிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் கதைக்காக காட்சிப்பொருளாக மட்டுமே வந்துசெல்கிறார்கள்.




மலை மேலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு ஷாருக் தீபிகாவை தூக்கிச்செல்லும் காட்சி அருமை.  தீபிகா ஷாருக்கின் கைகளுக்குள் அடங்கிவிடுகிறார்.  முன்னூறு படிகள் தீபிகாவை தூக்கிச்சென்று அவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.  நம்மையும் பொறாமைப்படவைக்கிறார்.



பெயரில்தான் சென்னை இருக்கிறதே தவிர படத்தில் சென்னையைக் காட்டவேயில்லை.  ராமேஸ்வரம் கோவிலையும் பாம்பன் பாலத்தையும் ஒரு காட்சியில் மட்டும் காட்டுகிறார்கள்.  படம் முழுவதும் தமிழ்நாட்டில் நடப்பது போல் காட்டியிருந்தாலும் உள்ளூரிலேயே செட் போட்டு எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.



சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயர், தமிழ் ஹீரோயின், தமிழ் வில்லன்கள், ரஜினியை மையமாக வைத்து ஒரு பாடல், மற்ற பாடல் காட்சிகளில் புலியாட்டம் போன்றவற்றைக் காண்பித்தல், பிரியா மணியுடன் ஒரு குத்துப்பாட்டு என்பவை மூலம் தமிழ்நாட்டின் சில்லறை ஓட்டுக்களையும் வாங்கிவிடவேண்டும் என்று மெனக்கிட்டு உழைத்திருக்கிறார் ஷாருக்.



பல வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய கதை.  எடுத்த விதத்தில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.  கொஞ்சம் கூட போரடிக்காத திரைக்கதை, ஷாருக்கின் நடிப்பு, காமெடி என்று பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.  நிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.