பெயர்: பால கணேஷ்

தளத்தின் பெயர்: மின்னல் வரிகள்

வயது: உடலுக்கு நாற்பதுக்கு மேல், மனதுக்கு இருபதுக்குக் கீழ்




இவரை கடந்த 15 நாட்களாக இணையத்தில் எங்கும் காணவில்லை.  கடந்த மாதம் 26ஆம் தேதி பதிவர் திருவிழாவில் சேட்டை என்ற பதிவை எழுதிய இவர் இந்தப் பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களுக்குக் கூட மறுமொழி அளிக்காமல் காணாமல் போயுள்ளார்.


சரி, பதிவு தான் எழுதவில்லை, மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறாரா என்று தேடினால் அதுவும் இல்லை.  முகநூலில் புதைந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் அங்கும் தேடினால் அங்கும் காணவில்லை.


இவரை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது, தன்னால் கடந்த ஒரு மாதமாக இணையப்பக்கம் வரமுடியவில்லை என்றும், பதிவர் திருவிழாவுக்கு முன் புத்தகங்களை தயார் செய்யும் வேளையிலும் தற்போது வேறு சில முக்கிய பணிகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் இன்னும் ஒரே வாரத்தில் முடித்துவிடலாம் என்றும் தெரிவித்தார்.  மீண்டும் இணையப்பக்கம் வந்ததும் தான் படிக்காமல் விட்டுப்போன அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.  மேலும், மின்னல் வரிகள் மீண்டும் நம்மை ஆட்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


சென்னையிலும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்துவரும் இந்த வேளையில் மின்னல் வரிகள் தளத்திலும் இடி மின்னலாய் பதிவுகளும் மழையாய் பின்னூட்டங்களும் வரவேண்டும் என்பதே என் அவா.  நிறைவேற்றி வைப்பாரா.