ஹோட்டல் SAFARI

ராயப்பேட்டையின் மிக முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் சட்டென்று கண்ணில் படாது.  காரணம் அந்த இடத்தின் டிராபிக்.  மயிலாப்பூரிலிருந்து ராயப்பேட்டை போகும் வழியில் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டியதும் வரும் சிக்னலுக்கு முன்னால் இடதுபுறத்தில் இருக்கிறது இந்த ஹோட்டல்.  நண்பர் ஒருவரின் ட்ரீட் இந்த ஹோட்டலில் ஒருநாள் அரங்கேறியது.







Ambience: கீழ்தளத்தில் Non-AC மேல் தளம் முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.  கூட்டமாக வருபவர்களுக்கு மேல் தளமே சிறந்தது.  தினமும் வந்து சாப்பிடுபவர்கள் கீழ் தளத்திலேயே சாப்பிடுகிறார்கள்.  மேல் தளம் மிகவும் நீட்டாகவே இருக்கிறது.  நான்குபேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் டேபிள் மற்றும் சோபா போட்டிருக்கிறார்கள்.  ஆனால் அதிக அளவில் உணவு வகைகள் வைக்கும்போது டேபிளில் இடம் போதவில்லை.






நாங்கள் ஆறுபேர் சென்றிருந்தோம்.  எல்லா உணவுவகைகளையும் சுவைத்துப்பார்க்கும் எண்ணத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளேட் ஆர்டர் செய்தோம்.  பிரியாணி வகைகளில் பிஷ், மட்டன், சிக்கன் மற்றும் ப்ரான் பிரியாணியும், சைட் டிஷ்ஷாக சிக்கன் மஞ்சூரியன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் பக்கோடா மற்றும் சிலோன் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.




சிக்கன் பக்கோடா



முதன்முதலில் வந்தது சிக்கன் பக்கோடா.  நாங்கள் ஆறுபேர் என்பதாலும், அனைவரும் பயங்கர பசியுடன் இருந்ததாலும் பக்கோடாவை போட்டோ எடுத்த அடுத்த நிமிடமே காலியானது.





சிக்கன் மொகல் பிரியாணி


ப்ரான் பிரியாணி





சிக்கன் செட்டிநாடு


எல்லா உணவு வகைகளையும் சூடாகவே கொண்டுவருகிறார்கள்.  சுவையும் அருமை.  பிரியாணியில் அரிசி சரியான பதத்தில் வெந்திருக்கிறது.  எக்ஸ்ட்ரா ரைத்தா மற்றும் குழம்பு வகைகளை கேட்டால் மட்டுமே கொடுக்கிறார்கள்.


ஆறுபேர் சாப்பிட்டும் மொத்த பில் ரூ.1535/- மட்டுமே.  அதாவது ஒரு ஆளுக்கு சுமார் 250 ரூபாய் வருகிறது.  கொஞ்சம் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும் இந்த சுவைக்கு இது worth என்றே தோன்றுகிறது.





நன்றி...

நான் எடுக்குறேன்டா சினிமா - கட்டிப்புளி

 இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.  இங்கு இடம்பெற்றிருக்கும் படங்களுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


கட்டிப்புளி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது அலுவலகத்தின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் இயக்குனர் நடிகர் கசிக்குமார்.  அவரிடம் கதை சொல்வதற்காக மூன்று முக்கிய இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.






முதலாவதாக போட்டோகிராப் பட டைரக்டர் 'பேரன்'

"போட்டோகிராப் டைரக்டரா, அருமையா காதல் கதை சொல்லுவாரே, வரச்சொல்லு, பேசுவோம்" தன் உதவியாளரிடம் சொல்கிறார் தாடியை தடவிக்கொண்டே...


"வணக்கம் கசிக்குமார் சார்"

"வாங்க வாங்க பேரன், எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன், நீங்க?"

"சூப்பரா இருக்கேன், என்ன ரொம்ப நாளா படமே எடுக்கலையா, ஆளையே காணோமே"

"இல்ல, கொஞ்சம் நடிப்புல இறங்க்கிட்டதுனால என்னால கதை எழுதுற மூடுக்கு வரமுடியல.  ஆனா ஒன்னு, உங்க கட்டிப்புளி பாத்ததிலிருந்து என்னால மனச கட்டுப்படுத்த முடியல.  சூப்பரா ஒரு கதை ரெடி பண்ணி கொண்டுவந்துட்டேன்,"

"அப்படியா, சொல்லுங்க கேப்போம்"






டைரக்டர் பேரன் தனது பாணியில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.  "அதாவது, உங்களுக்கு கல்யாணம். அதுக்கு பத்திரிக்கை கொடுக்க உங்க பழைய காதலியத் தேடி கேரளா போறிங்க"

"என்னது, என்னது, நான் கேரளாவுக்கா? ஏன்?"

"கதைப்படி கேரளாவுல நீங்க ஒரு அஞ்சு வருஷம் வேல பாக்குறிங்க.. அதனால தான்"

"கேரளா வேண்டாம், கதைய மாத்துங்க... ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்தமாதிரி ஏதாவது டவுன்ல வச்சிக்கலாம்.  ம்... மேல சொல்லுங்க"

பேரன் கொஞ்சம் டென்ஷன் ஆகிறார்.  'இந்த ஆளு ராஜபாளையத்த விட்டு வரமாட்டார் போலருக்கே, ஓடோடிகள்-ல ஆரம்பிச்சு கட்டிப்புளி வரைக்கும் எடுத்தாச்சு.. இன்னுமா அங்க லொக்கேசன் இருக்கு!'

"இல்ல கசிக்குமார் சார், கதைப்படி நீங்க கேரளாவில வேலைக்கு போறிங்க, அங்க பாஷை தெரியாம முழிக்கும்போது ஹீரோயின் உங்களுக்கு ஹெல்ப் பண்றா. அப்படியே உங்களுக்குள்ள ப்ரெண்ட்ஷிப் ஆரம்பிக்குது.  அப்படியே அது லவ்வாகி அந்த எடத்துல ஒரு சூப்பர் பாட்டு வைக்கிறோம்.  நீங்க தமிழ்ல பாடுறிங்க, ஹீரோயின் மலையாளத்துல பாடுது. எப்படி?"

"ஆஹா சூப்பர் பேரன், இருந்தாலும் கேரளா வேண்டாம், ராஜபாளையமே வச்சிக்கலாம்.  ஹீரோயினா நம்ம குஷ்மி மேனனையே போட்டுரலாம்"

'ம்க்கும், இவருக்கு கேரளா வேண்டாமாம், கேரளா ஹீரோயின் மட்டும் வேணுமாம்'







"என்ன பேரன் ஒண்ணுமே பேச மாட்டங்கிறிங்களே"

"ஆங், சரி சார், இப்போ நீங்க கல்யாண பத்திரிக்கை கொடுக்கப் போறிங்க"

இடைமறித்து, "ஆ, அப்போ ஒரு பூனை குறுக்க போகுது, நான் என்ன செய்யிறேன் தெரியுமா? ஊர்ல இருக்கிற எல்லா பூனையையும் புடிச்சி கட்டிப்போட்டுடறேன். அங்க பூனைகிட்ட ஒரு பஞ்ச் டயலாக் பேசறேன். 'மனுஷங்க போகும்போது பூனை குறுக்க போச்சுன்னா அது அவங்களுக்கு மட்டும்தான் அபசகுனம், ஆனா நீ வரும்போது நான் குறுக்க வந்தா அது உன் இனத்துக்கே அபசகுனம், எப்படி?"

பேரன் நிலைகுலைந்து போகிறார்.  'அய்யய்யோ, தெரியாம இந்தாள் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே, நல்லதா ஒரு காதல் கதை சொல்லலாம்னு வந்தா பூனை கிட்ட பன்ச் டயலாக் பேசறேங்கிறாரே, இது சரிவராது, எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்'

"சார், இப்போ நான் உங்களை சரியா புரிஞ்சிக்கிட்டேன், நீங்க சொல்ற கதை வேற, நான் கொண்டுவந்தது வேஸ்ட், உங்களுக்கு ஏத்த மாதிரி சூப்பரா ரெடி பண்ணிட்டு நாளைக்கே வர்றேன்" என்று சொல்லி விடைபெற்று ஓட்டம் பிடிக்கிறார்.

===============

அடுத்ததாக வருகிறார் இயக்குனர் பெங்கட் கிரபு




"மொதல்ல டைட்டிலை சொல்லுங்க" என்கிறார் கசிக்குமார்.

"கத்தி"

"என்னது, கத்தியா? எனக்கு ஏத்த டைட்டில்தான்"

"ஆமாண்ணே, டைட்டில் கத்தி, A BENKAT KIRABU மொக்கை அப்படின்னு கேப்ஷன் வைக்கிறோம்"

"ஆஹா, சூப்பர், எனக்கு ஏத்த மாதிரி டைட்டில் வச்சிருக்கீங்க, கதை சொல்லுங்க"

"அண்ணே, கதையெல்லாம் ஒண்ணுமே இல்ல, ஊர்ல நாலு தாடிக்கார ப்ரெண்ட்ஸ் சல்லித்தனம் செஞ்சிட்டு இருக்கீங்க,   உங்க நாலு பேரையும் பிரிக்கறதுக்கு ஊர்க்காரங்க சதி பண்றாங்க, இதத் தெரிஞ்சிக்கிட்ட நீங்க நாலு பேரும் சாமி நகைய திருடிட்டு கோவாவுக்கு ஓடிடறிங்க.  அதுக்கப்புறம் ஒரே தண்ணிதான், குஜால்தான்.  நீங்க பண்ற அட்டூழியத்தப் பாக்கற ஆடியன்ஸ் வயித்தெரிச்சல் படுறாங்க.  அப்புறம் அப்படி இப்படி பண்ணி கிளைமாக்சில் நீங்க நாலு பேரும் ஊருக்கு வந்து செட்டில் ஆயிடறிங்க. சரியா?"

"எல்லாம் சரி, நாலு பேரு யார் யாரு?"

"ஒண்ணு நீங்க, இன்னொருத்தர் என் தம்பி க்ரைம்ஜி, மத்த ரெண்டு பெரும் வேற யாரையாவது போட்டுக்கலாம்"

"என்னது, க்ரைம்ஜியா, அவர் கூடல்லாம் நம்மால நடிக்க முடியாதுப்பா"

"இல்லண்ணே, நான் எடுக்குற எல்லா படத்துலயும் அவனுக்கு ஒரு முக்கியமான ரோல் குடுக்குறது வழக்கம், அதனால தான்" என்று இழுக்கிறார்.

"இல்ல, இந்த காம்பினேஷன் நல்லாருக்காது, க்ரைம்ஜிக்கு பதிலா நம்ம சுமோ நாராயணனை போட்டுரலாம். அவர் கூட என் காமெடி ரொம்ப நல்லா இருக்கும்"

"அப்ப க்ரைம்ஜி?"

"நீங்க ரொம்ப சென்டிமென்ட் பாக்கிறீங்க, அவருக்கு வேனும்னா ஒரே ஒரு சீன்ல வர்ற மாதிரி காமெடி ஒண்ணு பண்ணிக்கலாம்"

"இல்லண்ணே, நான் மொண்ணை 600028 படத்துலருந்து எங்காத்தா வரைக்கும் லீட் ரோல் தான் கொடுத்திருக்கேன், இப்போ வரப்போற பெரிய ஆணி படத்துலயும் நல்லா பண்ணியிருக்கார்.  அவர என்னால இப்படி விட முடியாது"


"அப்ப வேண்டாம், நம்ம காம்பினேஷன்ல படம் வரவே வேண்டாம், நீங்க கிளம்புங்க"


விரட்டியடிக்கப்படாத குறையாய் பெங்கட் கிரபு கிளம்புகிறார்.

=====================

அடுத்ததாக வருகிறார், அருவா டைரக்டர் கரி.







"ஆஹா, நீங்க தான் எனக்கேத்த டைரக்டர். என்ன டயலாக், என்ன பஞ்ச், கலக்குறீங்க"


"ரொம்ப தேங்க்ஸ் அண்ணே, கதை சொல்லவா?"

"வேண்டாம், நானே சொல்றேன், படத்து பேரு அருவா, கதையெல்லாம் ராஜபாளையத்துல நடக்குது, தாடி வச்ச நாலு நண்பர்கள், காதல், ஏமாற்றம், சோகம், அழுகை, அம்மா செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம் இப்படி எல்லாமே இருக்குது. படத்துல முதல் சீனே பக்கத்து ஊர்க்காரனை கொலை பண்றேன், காரணம் அவன் எங்க ஊர்ப் பொண்ண கிண்டல் பண்ணியிருக்கான்.  அவனை படுக்கவச்சு பட்டாக்கத்தியால கழுத்த கொரகொரன்னு அறுக்கிறேன்.  அப்போ, கேமராவுக்கு பக்கத்துல நின்னு ரெண்டு பேர் ஒரு லிட்டர் ரத்தத்தை என் மூஞ்சியில் ஊத்துறாங்க.  ஏன்னா, அது கழுத்துல இருந்து தெறிச்சு  வர்ற ரத்தம்.  நான்தான் கொலை பண்ணினேன்கிறதை தெரிஞ்சிக்கிட்ட வில்லன் எனக்குத் தெரியாம என்கிட்டே ஆயுதம் எதுவும் இல்லாத நேரத்துல கொலை செய்ய ஆள் அனுப்புறான்.  ஏழு பேர், ஒருத்தன் நடு மண்டையில வெட்டறான், ஒருத்தன் கழுத்துல, ஒருத்தன் கையில, ஒருத்தன் கால்ல, ஒருத்தன் முதுகுல குத்துறான், மொத்தம் முப்பத்தி ரெண்டு இடத்துல வெட்டு விழுகுது.  அப்ப இண்டர்வல்.  நான் செத்துப் போய்ட்டேன்னு ஆடியன்ஸ் நெனச்சிக்கிட்டு இருப்பாங்க.  ஆனா, அங்கதான் வைக்கிறேன் ட்விஸ்ட்.  ஹீரோயின் தன்னோட நகைய வித்து மதுரையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்து என்னை காப்பாத்திடறா.  உயிர் பொழச்சு வந்த நான் வில்லன் கூட சண்ட போட்டு அவன் வேட்டியிலேயே அவனை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டான்டில கட்டிப்போடுறேன்.  அதுக்கப்புறம் வர்ற மோதல்ல அடிதடியாகி கிளைமாக்சில படத்துல நடிச்ச அத்தனை பேரும் செத்துப் போயிடறோம்"


மூச்சு விடாமல் சொல்லி முடித்த கசிக்குமாரை வியப்பாகப் பார்க்கிறார் அருவா டைரக்டர் கரி.


"அண்ணே, தண்ணி குடிங்க" என்று தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்கிறார்.  கசிக்குமார் அண்ணாந்து தண்ணீர் குடித்துவிட்டு குனியும்போது கரி எஸ்கேப்.


கரியின் மனதில் - 'நான்தான் பெரிய அருவா டைரக்டர்னு நெனச்சேன், இந்தாள் பயங்கரமா இருக்காரே.  இவர் கதை சொல்றதப் பாத்தா என் மூஞ்சியிலேயே ரத்தம் வருதே, நல்லவேளை, தப்பிச்சேன்' என்று தலைதெறிக்க ஓடுகிறார்.


"எங்கயா இந்த ஆளு?" என்று தன் உதவியாளரிடம் கேட்கிறார் கசிக்குமார். அதற்கு அவர் "இல்லண்ணே, நீங்க ரொம்ப கொடூரமா படம் எடுக்குறதா வந்துபோன எல்லா டைரக்டரும் சொன்னாங்கன்னே, எனக்கு என்னமோ அவங்க இனிமே இங்க வரமாட்டாங்கன்னு தோனுதுன்னே" என்கிறார்.


"ஓ, அப்படியா சங்கதி, போங்கய்யா, போங்க, நீங்க இல்லேன்னா என்ன, என் ஆருயிர் நண்பன் கவுத்துறசனி இருக்கான், எனக்காக எத்தனை படம் வேணும்னாலும் எடுப்பான், எங்க கூட்டணி எப்படின்னு தெரியும்ல?"


எல்லாரையும் திட்டிய களைப்பில் மீண்டும் தண்ணீர் குடித்துவிட்டு கவுத்துறசனிக்கு போன் செய்கிறார் கசிக்குமார்.  "நீங்கள் டயல் செய்த எண் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது, தயவுசெய்து சிறிது நேரத்துக்குப் பின் முயற்சிக்கவும்"  என்று வர என்னாச்சு என்பது போல் தன் உதவியாளரைப் பார்க்கிறார்.  உதவியாளரோ "அண்ணே, இதோ வந்துடறேன்" என்று எஸ்கேப் ஆகிறார்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் - கவிதை








அன்றொரு நாள்.  என் இதயத்தை யாரோ இரு கையால் பிசைவது போன்றொரு இனம்புரியா வலியொன்று தோன்றியது - அந்தக் காட்சியைக் காணும் சமயம்.  ஒரு உணவு விடுதியின் வாசலில் எச்சில் இலைத் தொட்டி.  தொட்டியைத் தோண்டிக் கொண்டிருந்தான் ஒரு மனநிலை தவறிய பிச்சைக்காரன்.  அவனருகே நாக்கில் நீர் வடிய ஓர் நாய்.  அவன் துழாவிய கைகளில் கிடைத்தது சில பருக்கைகளுடன் ஓர் இலை.  அவசரமாய் பசியாறிய முகம் தெரியா ஒருவனின் எச்சில் இலை அது.  ஆனால் அவனுக்கோ அது அட்சயப் பாத்திரமாக விளங்கியது.  ஆறறிவாயினும் ஐந்தறிவாயினும் அடிவயிற்றுத் தீ ஒன்று தானே.  அத்தீயின் வெப்பம் தாளாது ஆறறிவு ஐந்தறிவு ஆனது.  ஆம்! எடுத்துண்ண இரு கரம் இருக்கையில் வாய் கொண்டே வயிற்றை நிரப்பினான் அவன்.  அந்நேரம் உணர்ச்சியளையால் உள்ளம் இறைச்சலிடும்போது கவிதை எழுத கை வரவில்லை. 






மற்றொரு நாள் மற்றொரு இடத்தில் இதே போன்று இன்னொரு சம்பவம்.  ஒரு டீக்கடை முன் இருவர் டீ அருந்திக்கொண்டிருக்க அவர்கள் அருகில் கொறிப்பதற்காக சீவல் பொட்டலம்.  இமைக்காமல் அவர்கள் இருவருவரையும் பார்த்துக் கொண்டேயிருந்தது அவர்கள் முன் நின்ற நாய் ஒன்று.  அவ்வப்போது அவர்களும் அதற்கு இரையிட்டுக் கொண்டிருந்தனர்.  சற்றே தள்ளி நின்று இவர்களையே கவனித்துக்கொண்டிருந்தான் அதே பிச்சைக்காரன்.  அவன் மனதில் அந்நேரம் என்ன தோன்றும்? என்ற என் கேள்விக்கு விடைகாணும் சிறு முயற்சியே இக்கவிதை.  "வர வர உன் thinking ரொம்ப advance ஆ போகுது" இக்கவிதையைப் படித்த நண்பன் ஒருவன் நவின்ற வார்த்தைகள் இவை! உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் நான் ஜெயித்துவிட்டேன்.





நாக்கில் ஜலம்வடிய
நாய் நோக்கும்
நாயோடு சேர்ந்து
நானும் நிற்பேன்

நன்றி காட்ட நாய் வாலசைக்கும்
வார்த்தையில் சொல்ல
வாய் திறப்பேன் நான்

நக்கிய எலும்புத்துண்டு
நாய்க்கு வரும்
எனக்கோ வெறும்
ஏளனப் பேச்சுக்கள்

வார்த்தைகளை விட
வாலாட்டத்தின் வடிவத்திற்கே
வாக்குகள் எனில் -

இறைவா!
எனக்கும் வால் தா!



SPECIAL 26

ஸ்பெஷல் 26 என்று ஒரு ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது என்பது அனைவரும் அறிந்ததே (அறிந்ததா?).  எண்பதுகளில் நடைபெற்ற போலி சி.பி.ஐ. ரெய்டுகளை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது.




 

கதை...




முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் தலைமையிலான குழு மந்திரி ஒருவரின் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.  கிடைக்கும் பணம், நகை மற்றும் டாக்குமெண்டுகளை அள்ளிச் செல்கிறார்கள்.  அவர்கள் போலியான சி.பி.ஐ ஆபிசர்கள் என்பது பின்னர்தான் தெரியவருகிறது.  அவர்களைப் பிடிக்க வரும் நிஜ சி.பி.ஐ ஆபிசருக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு விறுவிறுப்பான ஓட்டம்தான் ஸ்பெஷல் 26.


கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கும் இந்த கும்பல் கடைசியாய் நகரின் மிகப்பெரிய நகைக்கடையில் ஒரே ஒரு பெரிய‌ ரெய்டு நடத்தி  பெரிய அளவில் சுருட்டிவிடத் திட்டமிடுகின்றனர்.  அதற்காக நிஜ சி.பி.ஐ. ஆபிசர்களைத் தேர்ந்தெடுப்பது போன்று 26 பேரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கின்றனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரும் தாங்கள் உண்மையான ஆபிசர்கள் என்றே நினைத்துவிடுகின்றனர்.  இதைத் தெரிந்துகொண்ட நிஜ சி.பி.ஐ, அவர்கள் கொள்ளை நிகழ்ச்சியை அரங்கேற்றும்போது பிடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டு நகைக்கடையில் உள்ள நகைகளை எல்லாம் மூட்டை கட்டி நகை செய்யும் பட்டறையில் கொண்டு போய் வைத்துவிட்டு கடையில் போலியான நகைகளை வைத்துவிடுகிறார்கள்.






கிளைமாக்ஸில் 26 பேர் கொண்ட போலி சி.பி.ஐ ஆபிசர்கள் குழு பேருந்தில் வந்து நகைக்கடை முன்பு காத்திருக்கிறார்கள்.  நிஜ சி.பி.ஐ ஆபிசர்களும் கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சேல்ஸ் கவுண்டரில் வேலை பார்ப்பவர்கள் போல மாறுவேடத்தில் இருந்து காத்திருக்கிறார்கள்.  ஆனால் நடப்பதோ வேறு, போலி சி.பி.ஐ.யின் முக்கிய புள்ளிகளான நான்கு பேர் நகைப்பட்டறைக்குச் சென்று ஒரு ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுகின்றனர்.  இங்கே நகைக்கடையில் காத்திருக்கும் நிஜ சி.பி.ஐ., பேருந்தில் காத்திருக்கும் போலி சி.பி.ஐ. என்று இரண்டு காத்திருக்கும் கும்பல்கள்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் நிஜ சி.பி.ஐ. போலி சி.பி.ஐ.யைப் பிடித்து விசாரிக்க, முக்கிய புள்ளிகள் மட்டும் வராதது தெரிகிறது.  அதற்குள் நகைப்பட்டறையில் அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வர நிஜ சி.பி.ஐ. அதிர்ச்சி அடைகிறார்கள்.



மாறுவேடத்தில் இருக்கும் சி.பி.ஐ. ஆபிசர்களை ஒவ்வொருவராக வெளியேற்றும் போது தான் தெரிகிறது, நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் மொத்தம் 26 பேர் என்று.  ஸ்பெஷல் 26 என்ற பெயரில் ரெய்டு நடத்த வந்திருக்கும் போலி கும்பலுக்கு காவல் நின்ற ஸ்பெஷல் 26 சி.பி.ஐ. ஆபிசர்கள் நிஜமான சி.பி.ஐ. என்ற அதிர்ச்சியுடன் படம் முடிவடைகிறது.



இந்தப்படத்தின் முக்கிய கதைத்திருப்பமான கிளைமாக்ஸ் காட்சியில் நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் பல்பு வாங்குவது மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.







டிஸ்கி 1: இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் சிடியை திடங்கொண்டு போராடு சீனு என்னிடமிருந்து வாங்கியிருந்தார்.


டிஸ்கி 2: இந்தப் படத்தின் கதைக்கும் திடங்கொண்டு போராடு சீனு நடத்தும் காதல் கடிதம் பரிசுப்போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



படங்கள் உதவி: கூகுள், சீனு


கடன் - சிறுகதை

கடன் - சிறுகதை


"நாளைக்கு நான் வர்றப்ப வட்டிப்பணமாவது ரெடியாயிருக்கணும். இல்ல....!"

வழக்கம்போல் வாக்கியத்தை முடிக்காமலே கடன் கொடுத்தவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த பாஸ்புக் கையில் கிடைக்கும் வரை.  யோசனையோடு பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தபோது தான் அது கண்ணில் பட்டது.

தாய்க்குத் தலைமகன் போல, கஞ்சன் கையில் கரன்சி போல... இப்படி எத்தனை உவமானம் சொன்னாலும் அத்தனையும் அர்த்தமற்றதாகிவிடுவதைப் போலத் தோன்றியது.. அந்தப் புதையல்..


Balance Rs.5742/‍- என்றிருந்தது.

போதும், இது போதும், கடன்காரனின் வாயை அடைக்க இது போதும்.

=============

என் இருசக்கர வாகனத்தை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தேன்.  என் மனதில் ஏதோ இனம் புரியாத படபடப்பு,  ரொம்ப நாளுக்கப்புறம் படித்த கல்லூரியைக் காணப்போகிறேன்.  இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி வருமே?

கடன்காரனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்.  திடீரென்று கல்லூரியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறானே. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

இது தானே உங்கள் கேள்வி?

பொறுமை, பொறுமை.

வண்டி முன்னேறிக்கொண்டிருந்தாலும் மனம் ரிவர்ஸ் கியரில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

இதோ, இந்தச் சாலையில்தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வருவோம்.  சைக்கிளில் போகும்போது சாகசங்கள்! இரண்டு கைகளையும் விட்டுவிட்டு ஓட்டுவது, தோளோடு தோள் சேர்த்துப் போவது, நடுவில் வரும் ஸ்பீடு பிரேக்கர்களில் முன் சக்கரத்தை குதிரையைப் போல தூக்குவது, இதைப்போல் பல சாகசங்கள். எல்லாம் உடன் படிக்கும் சைட்டுகளின் முன்னால் தான்.

எங்கள் காலேஜ் கோ‍எட் தான் என்றாலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கும்.  இருபாலரும் தங்கள் எல்லைகளைப் புரிந்துகொண்டு உரிமைகளை வரையறுத்துக்கொண்டு அந்த வட்டத்திலேயே வளையவருவது ஒரு தனி அழகுதான்.  அதைவிட ஆச்சரியம் அந்த வட்டத்தை யாருமே தாண்டாமலிருந்தது.

சாலையின் இரண்டு பக்கங்களிலும் பெயர் தெரியாத மரங்களின் அணிவகுப்பு. பெயர்தான் தெரியாதே ஒழிய ஏப்ரல் மாதத்தில் பூக்கும் அந்த ரத்தச் சிவப்பு நிறப் பூக்கள் மிகவும் ஃபேவரிட்.  ஒவ்வொரு மரத்தினடியும் கல்லால் ஆன பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.  அதில்தான் நானும் மூர்த்தியும் எப்போதும் அமர்வோம்.  மூர்த்தி என் வகுப்புத் தோழனாய் அறிமுகமாகி பின் அவனுடைய நடவடிக்கைகளால் என்னை பெரிதும் கவர்ந்தவன்.  மற்றவர்களைக் காட்டிலும் ஒரு படி அதிகமாய் என் மனதில் உள்ளவன்.  நானும் அவனும் இன்னதென்றில்லாமல் எல்லா விஷயங்களும் பேசுவோம். அரசியல், சினிமா, நட்பு, காதல், கவிதை, வகுப்பு, இன்ன பிற என்று இல்லக்கின்றிப் பேசுவோம்.

இன்னும் மரமிக்கிறது, பெஞ்ச் உள்ளது, பூ உள்ளது.  ஆனால் பெஞ்சில் எங்களுக்குப் பதிலாக வேறு சில இளைய நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் இக்காலத்துக்கு ஏற்றபடி அவர்களது இத்யாதி இத்யாதிகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  நானோ அவர்களை ரசிக்கும் நிலையில் இல்லை. இப்போது நான் வந்திருக்கும் வேலைதான் முக்கியம்.

இருசக்கர வாகனத்தை நிறுத்தும் இடம் வந்தேன்.  அருகிலேயே சைக்கிள் ஸ்டாண்ட்.  நான் எப்போதும் ஏழாவது தூணுக்குப் பக்கத்தில்தான் என் சைக்கிளை விடுவேன். நான் படித்த மூன்றாண்டுகளும் அந்த இடத்தில் தான் சைக்கிளை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  நான் நிறுத்தும் முன்னரே வேறு யாராவது அங்கு சைக்கிளை நிறுத்தியிருந்தால் அதை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் என் சைக்கிளை நிறுத்துவேன்.  அந்த இடம் இப்போது காலியாக இருந்தது.  அதை நான் கவனித்திருந்தாலும் முதலாவது தூணுக்குப் பக்கத்திலுள்ள காலி இடத்தில் என் வண்டியை நிறுத்தினேன்.





நீள் செவ்வக வடிவில் கல்லூரியின் முகப்புக் கட்டிடம்.  நடுவில் உள்ள படிகளை ஏறியவுடன் ஒரு ஹால். ஹாலின் நடுவே நிறுவனரின் வெண்கலச்சிலை. அதன் அருகே அன்றலர்ந்த பன்னீர் புஷ்பங்கள்.  இவை தினசரி மாறாமலிருக்கும்.

நான் ஒவ்வொரு படியாக ஏறத்தொடங்கினேன். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கடந்துவிட்டனவே! அனுபவம் மிக்க சம்பவங்கள் நிறைந்த நான்கு வருடங்கள்! என்னவெல்லாம் நடந்துவிட்டன அதற்குள்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது.  ஆனால் வரும் சம்பளமோ வயிற்றுப்பாட்டிற்கே சரியாய் இருந்துவந்தது.  அதனால் அதுகூட ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.

திடீரென்று கம்பெனியில் லேஆஃப்.  அனைத்து தொழிலாளர்களும் தெருவில் நின்றோம்.  உள்ளூர்க்காரர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்ய என்னைப்போன்ற வெளியூர்க்காரர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.  சோகத்தோடு திரும்பினேன்.  ஊரிலிருந்தபடியே வேறு வேலைக்கு முயற்சி செய்தேன்.  ஆனால் இம்முறை அதிர்ஷ்டம் என்னை கைவிட்டுவிட்டது.

விரக்தியோடு சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் என் அக்கா மகளுக்கு காதணி விழா வந்தது.  என்னதான் சும்மா சுற்றிக்கொண்டிருந்தாலும் தாய்மாமனான நான் ஏதாவது செய்யவேண்டுமே! என்ன செய்வதென்று தெரியவில்லை.  அம்மா அப்பாவிடமும் கேட்கக்கூடாது. கூடாதென்ன முடியாது.  அவர்கள் என்னை இன்னும் "தண்டச்சோறு" என்று கூப்பிடாமல் இருப்பதே பெரிய விஷயம்.

அந்த நேரத்தில் தான் உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் செய்த ஒரு தவறுதான் இன்று இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது.

ஆம்! என் கல்விச் சான்றிதழை ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துவிட்டேன்.  வாங்கிய பணத்தை விழாவில் என் பங்களிப்பாக அக்காவிடம் கொடுத்துவிட்டேன்.

தனியே வந்து யோசிக்கையில் தான் தவறு புரிகிறது.  ஆனால் எல்லாம் முடிந்த பிறகு என்ன செய்ய.  கடன் கொடுத்தவன் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.  அவன் வீட்டுக்கு வந்து மானத்தை வாங்குவதற்குள் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்.

எங்கள் கல்லூரியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று இருந்தது.  அதில் நானும் ஒரு கணக்கு தொடங்கியிருந்தேன்.  என் படிப்புக்கு வரும் பணத்தின் மீதி, செலவுக்கு வரும் பணம் போக பாக்கி என்று என்னால் முடிந்த போதெல்லாம் சிறுகச் சிறுக அந்தக் கணக்கில் சேர்த்துவைத்திருந்தேன்.

அப்போது கையில் தாராளமாக பணப்புழக்கம் இருந்ததால் இதை எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை.  நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதன் தேவை புரிந்து எடுக்கச் சென்று கொண்டிருந்தேன்.


நீள் வராண்டாவின் கடைசியில் இருக்கும் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  ஒரு புறம் வகுப்பறைகள், மறு பறம் மைதானம்.  மைதானத்தில் ஆங்காங்கே மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்க்கும் போது தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.  நான் ஏதாவது தவறு செய்யப்போகிறேனோ?  எனக்கும் என் கல்லூரிக்கும் இடையேயான கடைசித் தொடர்பு இந்தக் கணக்கு தான்.  இதையும் முறித்துவிட்டால்....?

அவ்வளவு தானா?  பணத்தை எடுத்துவிட்டால் அவ்வளவுதானா?  இனி எனக்கும் இந்தக் கல்லூரிக்கும் இடையே தொடர்பே கிடையாதா?  வாழ்நாள் முழுவதும் எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் அந்நேரங்களில் எல்லாம் நினைத்து என்னைத் தேற்றிக்கொள்ளும்படியாய் எத்தனையோ சம்பவங்களை பரிசளித்த இந்த நண்பனின் கடைசித் தொடர்பையா துண்டிக்கப் போகிறேன்! வேண்டாம்! வேண்டாம்!





வராண்டாவின் முடிவில் வங்கி அலுவலகம்.  அதற்கு முந்தின அறையில் ராமசாமி ஆசிரியர் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார், இந்தப் பழமொழிக்கு அனைவரும் தவறான அர்த்தமே கற்பித்து வருகின்றனர்.  இங்கு அடி என்பது நண்பர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்"

அவர் மேலும் சொல்லிக்கொண்டே போக நான் கண்ணோரம் பொங்கிய நீரை அடக்கியவாறே திரும்பிவிட்டேன்.

மறுநாள்....

"டேய், உன் ஸ்கூட்டரை எங்கடா காணோம்?"

அம்மா கேட்டபோது மெளமாகத் தலை குனிந்துகொண்டேன்.

ஆண்டிராய்டில் இனி மின்னல் வரிகள்

கடந்த வாரம் நான் மெட்ராஸ்பவன் சிவாவின் ஃபோரம் மால் பற்றிய இந்தப் பதிவையையும் திடங்கொண்டு போராடு சீனுவின் சொல்ல விரும்பாத ரகசியம்  படித்தபோதும் அதிர்ச்சியடைந்தேன்.  காரணம் அண்ணன் மின்னல் வரிகள் பாலகணேஷின் பின்னூட்டங்கள்.  தன் படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்குக் கூட "ஹா ஹா என்று வாய்விட்டுச் சிரித்த உங்களுக்கு என் உள்ளம் நிறைந்த‌ நன்றி" என்றுதான் பதில் பின்னூட்டம் இடுவார்.  இப்போது என்னவென்றால் புதிதாக ஆங்கிலத்தில் பின்னூட்டம்.




எனக்கு ஒரு சந்தேகம், ஒரு வேளை அவர் போனில் பின்னூட்டம் எழுதியிருப்பாரோ என்று.  கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் அண்ணன் ஆண்டிராய்டு போன் வாங்கியிருக்கக் கூடும் என்று புரிந்துவிட்டது.  இருந்தாலும் என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அவருக்கு போன் செய்து கேட்டேவிட்டேன். 




"என்ன சார், ஆண்டிராய்டு போன் வாங்கிட்டீங்களா?"


"ஆமா, எப்படி கண்டுபிடிச்சே?"


"இல்ல, இன்னைக்கு இங்கிலீஷ்ல கமெண்ட் போட்டிருந்தீங்களே, அதைவச்சி ஒரு சந்தேகம்"


"அதானே, நான் செந்தமிழ்ல கமெண்ட் போடுற ஆளு, எப்படி இங்கிலீஷ் கமெண்ட்னு உனக்கு சந்தேகம் வந்திருக்கும், கரெக்ட்"


"சார், உங்க ஆண்டிராய்டு போனிலேயே தமிழ்ல டைப் பண்றதுக்கு சாப்ட்வேர் இருக்கு, நான் அப்புறமா அதுக்கு லின்க் அனுப்பறேன்"


சொல்லிவிட்டேனே தவிர மனதுக்குள் வேறு ஒரு சிந்தனை.  இதை ஒரு பதிவாக வெளியிட்டால் என்ன?  நிறைய பேருக்கு பயன்படுமே என்று நினைத்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.



இந்த அப்ளிகேஷனை நிறுவ நமக்கு வேண்டியது ஒரு ஆண்டிராய்டு போன். எந்த வெர்ஷனாக இருந்தாலும் சரி.  கீழே உள்ள கூகிள் ப்ளேஸ்டோரின் முகவரியில் சென்று நிறுவிக்கொள்ளவும் அல்லது Google Play Store சென்று KM Tamil Keyboard என்று தேடவும்.







இதை நிறுவியவுடன் நாம் முதலில் செய்யவேண்டியது Setting சென்று Language என்ற பிரிவில் KM Tamil Keyboard என்ற ஆப்ஷனை டிக் செய்துகொள்ளவும்.



இதை நிறுவியவுடன் நீங்கள் தமிழில் டைப் செய்ய வேண்டிய தளத்துக்குச் சென்று வழக்கம்போல யுனிகோட் தட்டச்சு முறையில் டைப் செய்யவும். உதாரணமாக "பாலகணேஷ்" என்பதை  "baala kaNEsh" என்று டைப் செய்யவும்.  பின்னர் கீழிருக்கும்  "Cnv" என்ற‌  பட்டனை அழுத்தினால் ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகள் தமிழுக்கு மாறிவிடும்.



சில வார்த்தைகளை தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று பார்ப்போம்.



கொஞ்சம் - konjsam
நலம் - nalam
மகிழ்ச்சி  - makizchchi
வாழ்த்துக்கள் - vaazththukkaL
அரங்கம் - arangkam



இந்த மென்பொருளை தரவிறக்குவதற்கு மட்டுமே இணைய இணைப்பு தேவை.  பயன்படுத்துவதற்குத் தேவையில்லை.  இதை உபயோகித்து பதிவுகளும், பின்னூட்டங்களும் குறுஞ்செய்திகளும் அனுப்பலாம்.  பாலகணேஷ் சார், உடனே உங்க போனை எடுங்க, டயல் பண்ணுங்க, ச்சீ, டவுன்லோட் பண்ணுங்க.



இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளவும்.



நன்றி...

சென்னையில் திடீர் பதிவர் சந்திப்பு

பதிவர்கள் பத்து பேர்




திடீரென்றுதான் முடிவானது.  நேற்று காலை திடங்கொண்டு போராடு சீனு எனக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னவுடன் தான் தெரிந்தது.  சனிக்கிழமை எனக்கு அலுவலகம் அரை நாள் என்பதால் மாலை நண்பர் ஒருவருடன் பரங்கிமலை செல்வதாக முடிவு செய்திருந்தேன்.  சீனு எனக்கு பதிவர் சந்திப்பு விஷயத்தைச் சொன்னதும் பரங்கிமலை அங்கேயேதான் இருக்கும், இத்தனை பதிவர்களை நேரில் சந்திப்பது அரிது என்று ப.மலை பயணத்தை பரண் மேல் போட்டுவிட்டேன்.



இடமிருந்து வலமாக அரசன், புலவர் ஐயா, நான், ராஜ், சிவா, மதுமதி, பாலகணேஷ்




இடம் தி நகர் புலவர் ராமானுசம் ஐயா அவர்களின் இல்லம்.  நானும் சீனுவும் சேர்ந்து ஒன்றாகவே புறப்பட்டுச்சென்றோம்.  எங்களுக்கு முன்பாகவே மின்னல் வரிகள் பாலகணேஷ், சினிமா சினிமா ராஜ் மற்றும் மெட்ராஸ்பவன் சிவா ஆகியோர் வந்திருந்தனர்.  நாங்கள் சென்றதும் பின்னாலேயே அரசன், மதுமதி ஆகியோர் வந்தனர். சென்னைப் பித்தன் ஐயாவும் ஆரூர் மூனா செந்திலும் வந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.



சென்னையின் நாயகன்




பேச்சினூடே கொறிப்பதற்கு மன்னா ஸ்வீட்ஸ் மிக்சர், சமோசா, பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை புலவர் ஐயாவே ஏற்பாடு செய்திருந்தார்.



தின்பண்டங்களை ஆராய்ச்சி செய்யும் ஜெய்



சென்னைப்பித்தன், ஜெய், சீனு, அரசன்



வெட்கத்தில் ஆரூர் மூனா




திடங்கொண்டு போராடு சாந்தமாக




அடியாள் அரசன்




போட்டோ எடுக்கும் என்னை போட்டோ எடுக்கும் சென்னைப்பித்தன்




குரூப் போட்டோ



என்னது? என்ன பேசினீங்கன்னா?  அதெல்லாம் மூத்த பதிவர்கள் சொல்வார்கள்.  நான் வுடு ஜூட்...




மனிதம் தேடி....

மனிதம் தேடி....







மாலை வேளை. இதமான வெயில், சுகமான காற்று. உறங்கினேன்.  கனவுதானா என்று உறுதிப்படுத்த முடியாத காட்சி கண்ணெதிரே விரிந்தது.  ஓங்கிய பெரும் மலையின் உச்சிப்பாறையொன்றின் மீது நின்றபடி உலகெங்கும் தழுவிடும் ஓர் பார்வையை வீசுகிறேன்.  அந்நேரம் மனதில் ஒரு கேள்வி.  "மனிதமா? மிருகமா?" என்ன ஏது என்று உணர்வதற்குள் நித்திரை கலைந்து நிகழ்காலம் வந்துவிட்டேன்.  ஆனால் கனவின் தாக்கம் என்னுள்ளே பல கேள்விகளை எழுப்புகிறது.  யோசிக்கையில் பதிலாய் மீண்டும் வேறு கேள்விகள். ஏன்? எதனால்? எப்படி? என்ன காரணம்? சொல்லத் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிகள் மட்டும் உண்மை.  என்னுடைய கேள்விகளை இறைவனிடம் கேட்கிறேன்.  இறைவன் என்ன சொல்கிறான்? படிப்போமா...



மனிதத்தைத் தேடி
மரத்துப் போன மனத்திற்கு
மருந்து தேடி
மலை ஒன்றினை அடைந்தேன்


உயரத்தில் நின்று
உலகினைப் பார்த்தேன்
உச்சிப்பாறையில் நின்ற‌
ஒருவனைத் தவிர‌
ஒருவரும் இல்லை


தள்ளி நின்று
தயக்கத்துடன்
தங்கள் பெயரென்ன‌
என்று கேட்டேன்


இதழோரச் சிரிப்பு காட்டி
இறைவன் என்றான்
மலை ஏறிவந்த
மர்மம் என்ன?
மாறாச் சிரிப்புடன்
எனைக்கேட்டான்


மனிதன் ஒருவனை
மாநிலம் தனில் தேடி
மலைத்ததனால்
மலைதனை வந்தடைந்தேன்
மரிப்பதற்கு

உன்னுள்ளே இருக்கும்
உன்னத மனிதனை
உணராமல்
இறப்பதற்காகவா
இவ்விடம் வந்தாய்?


என்னுள்ளே இருக்கும்
எண்ணற்ற சக்திகளை
ஏறிட்டுப் பார்க்க‌
எவருமில்லை என்றுதான்
குன்று ஏறிக் குதிக்க வந்தேன்


மண்ணுலகில்
மனிதருக்கா பஞ்சம்?
இவனின்றேல் அவன்
அவனின்றேல் மற்றவன்
இன்றே செல்,
இதய உணர்வை
இதமாய்ச் சொல்!


இறைவா!
உயிர்களைப் படைத்தாய்
உலகத்தில், ஆனால்
உணர்வுகளைப் படைத்தாயா?
மனிதத்தோடு கூடிய‌
மனிதன் ஒருவனை
அறிமுகப்படுத்து எனக்கு!
அடிமையாவேன் நானுனக்கு!
மனிதனுக்கு
மனிதத்தை வைக்க‌
ம‌றந்து போனதால்
நீ படைத்தது
மனிதனையல்ல‌
மிருகங்களையே
மீண்டும் படைத்துள்ளாய்
காட்டில் வசிப்பவைக்கு
நான்கு கால்கள்
நாட்டில் வசிப்பவைக்கு
இரண்டு கால்கள்
இவ்வளவு தான் வேறுபாடு
இருவருக்கும்
படைத்தவனே
இன்னுமா புரியவில்லை?
மனிதம் மறைந்திருப்பது
மிருகத்தில் என்பது!

எடுத்துச்சொன்ன என்னை
ஏறிட்டுப் பார்த்த இறைவன்
இறங்கி வந்துவிட்டான் என்னுடன்
மனிதத்தைத் தேடி!