சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?

நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மெட்ரோவில் பயணித்து வருகிறேன். நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை கடந்த ஜூன் வரை பயணித்திருக்கிறேன். அதற்குப் பிறகு, என் அலுவலகம் நந்தனத்திற்கு மாறிவிட்டதால் தற்போது வரை நந்தனம் வரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
மெட்ரோ பயண அட்டையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று டிராவல் அட்டை, மற்றொன்று டிரிப் அட்டை. நான் இரண்டு அட்டைகளையும் வைத்திருக்கிறேன். இவற்றில் டிராவல் அட்டை என்பது சென்னை மெட்ரோவில் எங்கிருந்தும் எங்கு வரையிலும் பயணிக்கக்கூடியது. டிரிப் அட்டை என்பது குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய அளவிலான அட்டை. (முந்தைய நிலையங்களிலும் இறங்கிக்கொள்ளலாம்) டிரிப் அட்டைக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், டிராவல் அட்டைக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். உதாரணமாக, நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை பயணக் கட்டணம் ரூ.40. எந்த அட்டையும் இல்லாத ஒருவர் 40 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், டிராவல் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 36 ரூபாய் செலுத்தினால் போதுமானது. டிரிப் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 32 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பணம் செலுத்தும் முறை: பணத்தை ரொக்கமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் அட்டை மூலமாகவோ செலுத்தலாம். டிராவல் அட்டைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், டிரிப் அட்டைக்கு நாம் எத்தனை டிரிப் என்று கணக்கிட்டு அந்தத் தொகையைத்தான் செலுத்த வேண்டும். உதாரணமாக, என் டிரிப் அட்டையில் வாரம் 320 ரூபாய் (10 டிரிப்) செலுத்துவேன். (காலை அலுவலகம் செல்வதற்கு ஒன்றும், மாலை திரும்ப வருவதற்கு ஒன்றும் ஆக மொத்தம் வாரத்திற்கு 10 டிரிப்). 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு, டிரிப் அட்டைக்கு 320 போக மீதம் உள்ள 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்திவிடுவேன்.
பணம் கழிவது எப்படி? நுழைவாயிலில் எந்திரத்தாலான தடுப்பு போடப்பட்டிருக்கும். அந்த எந்திரத்தில் அட்டையை வைப்பதற்கான இடம் ஒன்றும் இருக்கும். அந்த இடத்தில் நமது அட்டையை வைத்தால், நாம் உள்ளே செல்வது உறுதி செய்யப்பட்டு, தடுப்பு திறக்கும். டிராவல் அட்டை என்றால், எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும், டிரிப் அட்டை என்றால், எத்தனை டிரிப் மீதம் இருக்கிறது என்பதையும் அங்கிருக்கும் திரை காட்டும். நாம் சென்று சேர வேண்டிய நிலையம் வந்து அடைந்ததும், வெளியேறும் வழியில் மீண்டும் நாம் அட்டையை வைக்க வேண்டும். அப்போது அங்கிருக்கும் திரையில் பணம் கழிந்ததைக் காட்டும். டிராவல் அட்டையாக இருந்தால் 36 ரூபாய் கழிந்து மீதம் உள்ள தொகையைக் காட்டும். அதே நேரத்தில், தடுப்புக் கதவும் திறந்துவிடும். டிரிப் அட்டையாக இருப்பின், மீதம் உள்ள டிரிப் எண்ணிக்கையைக் காட்டும். நான் எதற்காக 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்துகிறேன் என்ற கேள்வி எழலாம். முன்பெல்லாம் வண்டி நிறுத்துவதற்குப் பணம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு 15 ரூபாய் வரும். இப்போது பணம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக டிராவல் அட்டையை வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அங்குள்ள பணியாளர்களிடம் கிரெடிக் கார்டு தேய்க்கும் எந்திரம் போன்ற எந்திரம் ஒன்று இருக்கும். காலையில் உள்ளே நுழையும்போது அட்டையை அதில் வைத்துவிட, அது நேரத்தைக் குறித்துக்கொள்ளும். மாலையில் வண்டியை எடுத்துவிட்டு வெளியேறும்போது மீண்டும் அட்டையை வைத்தால் அதில் பணம் கழிந்துவிடும்.
இப்போது இன்னொரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிராவல் அட்டைக்குப் பாதித் தொகை மட்டுமே வசூலிக்கிறார்கள். அதுபோன்ற நாட்களில் எனக்கு டிராவல் அட்டையில் பயணம் செய்வது லாபகரமாக இருக்கிறது.
கோராவில் கேட்கப்பட்ட "சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?" என்ற கேள்விக்கு என் பதில்.

செல்வி

செல்வி

========

மனைவிக்கு ஒரு கெட்ட(!?) பழக்கம். எங்காவது புதிய இடங்களுக்குச் சென்றாலோ, விருந்து, விழாக்களுக்குச் சென்றாலோ அங்கிருப்பவர்கள் சிலரை நட்பாக்கிக்கொள்வார். அவர் ஆக்கிக்கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஆகிவிடுவார்கள். ஓரிடத்திற்குத் தனியாகச் செல்லும் அவர், அங்கிருந்து திரும்ப வரும்போது தோழியர் புடைசூழ வருவார். அது மட்டுமல்ல, அந்த நட்பு நீண்ட நாள் நீடித்திருக்கும் என்பது வரலாறு.

சான்றிதழ் வாங்குவதற்காக இந்தி பிரச்சார சபைக்குச் சென்றவர், தான் படிக்கும் நிலையில் இருக்கும் சில பெண்களுடன் பழகி, வாட்ஸப் குழு உருவாக்கிக்கொண்டு படிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வதும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதும், அவ்வப்போது அரட்டை அடித்துக்கொள்வதும் உண்டு. திருமண விழாக்களுக்குச் சென்றால் கேட்கவே வேண்டாம்.

எங்காவது புதிய இடத்திற்குச் சென்று வந்திருந்தால் நான் கேலியாகக் கேட்பேன், “எத்தனை பேருக்கு நம்பர் கொடுத்தே? எத்தனை பேர் கிட்ட நம்பர் வாங்கினே?” என்று. அவரும் வழிந்துகொண்டே எத்தனை என்பதைக் கூறிவிடுவார். ஆனாலும், ஆள் உஷார்தான். உண்மையான நட்புடன், அன்புடன் பழகுபவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் கில்லாடி. அப்படியும் ஏமாற்றும் எண்ணத்துடன் பழகுபவர்களை அடையாளம் கண்டுவிட்டால் போதும், “இப்போ என்ன ஆச்சு? காசு பணமா போச்சு? அன்புதானே? திரும்பக் கிடைக்கும்” என்று சொல்வார்.

சரி. இதற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆண்களில் சரவணன், செந்தில் என்பதைப் போல் பெண்களில் செல்வி, பிரியா என்ற பெயர்கள் மிகவும் அதிக அளவில் இருக்கும். என் மனைவியின் ஃபோனில் கூட Selvi Akka, Selvi FB, Selvi (Pavithra Amma), Selvi Velachery என்று பல பெயர்களில் செல்வி என்ற பெயர் இடம் பெற்றிருக்கும். மேற்கூறியவை எனக்கு நினைவில் இருப்பவை மட்டுமே. இன்னும் எத்தனை செல்விகள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வீட்டிற்கு அருகே “Drunken Monkey” என்ற கடை ஒன்றைத் திறந்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கு இரண்டு நாட்களுக்கு முன் மனைவியும், தங்கை மகளும் சென்றிருக்கிறார்கள். அங்கு மில்க் ஷேக் குடித்துவிட்டு வந்தவர்கள், அங்கிருந்த கடைப் பெண் ஒருவரிடம் நட்பாகியிருக்கிறார்கள். புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படங்களை அந்தப் பெண் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். மனைவி என்னிடம் அவற்றைக் காட்டினார். அப்போதுதான் அவருடைய பெயர் செல்வி என்பதைக் கவனித்தேன். அந்த செல்வியின் பெயரை இப்படித்தான் தன் ஃபோனில் சேமித்து வைத்திருக்கிறார். “Selvi Drunken Monkey.”