இதற்கு முந்தைய கணினி அனுபவப்பதிவைப் படித்தவர்கள் பெரும்பாலானோர் ரொம்ப சுருக்கமாசொல்லியிருப்பதாக பின்னூட்டத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  தவிர நானும் தலைப்பை "எனது கணினி அனுபவங்கள்"னு பன்மையில் வைத்துவிட்டதால் விரிவான ஒரு பதிவை எழுதியே ஆகவேண்டும் என்று அந்த இயற்கையே கட்டளையிட்டது போன்ற உணர்வு.  அதனால நீங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, இன்னொரு பதிவு படிச்சே ஆகணும்.







இது 1997-1998 இல் நடந்தது.  அந்த வருடம் நான் டிப்ளமா முடித்த கையோடு திருநெல்வேலியில் உள்ள அந்த மிகப்பெரிய தொழிற்சாலையின் எச்.ஆர். டிபார்ட்மெண்டில் அப்ரண்டிஸ் ஆக வேலைக்குச் சேர்ந்தேன்.  அந்த நிறுவனம் ஒரு துறைக்கு இருவர் என்று உதவிக்காக டிப்ளமா படித்தவர்களை அப்ரண்டிஸ் ஆக வேலைக்கு வைத்துக்கொள்வது வழக்கம்.  என்னுடைய வேலை நிறுவனத்தில் புதிதாக சேருபவர்கள், விலகிச்செல்பவர்கள், ஊர் மாற்றம், துறைமாற்றம் ஆகும் தொழிலாளர்களின் தகவல்களை கணினியில் உள்ளீடு செய்யும் டேட்டா என்ட்ரி, மேலாளர்களுக்குத் தேவையான தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளைத் தயார் செய்வது என்பது போன்றவை.



இப்போதெல்லாம்  ஒரு நபருக்கு ஒரு கணினி என்று கொடுக்கிறார்கள்.   ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு டிபார்ட்மெண்டுக்கு ஒரு கணினி தான்.  ஒரு துறையில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் பத்து பெரும் தினமும் சண்டையிட்டுக்கொள்வார்கள். அவர்களுடைய குடுமிப்பிடி சண்டையில் நானும் சிக்கித் தவித்திருக்கிறேன்.



நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும் FOXPRO என்ற சாப்ட்வேரில் டிசைன் செய்திருந்தார்கள்.  டேட்டாபேஸ் அப்டேட் செய்வது  அந்த சாப்ட்வேரில் தான். இது DOS இல் இயங்கக்கூடியது. அப்போதைய கணினி திறந்தவுடன் DOS PROMPT இல் தான் இருக்கும்.  WINDOWS பொறுத்தவரை 3.1 என்ற வெர்ஷன் தான் இருந்தது.  நாம் FOXPRO வில் வேலை செய்யும்போது நம்மால் விண்டோஸ் திறக்க முடியாது.  எல்லாவற்றையும் சேமித்துவிட்டு FOXPRO வை மூடிவிட்டு  DOS PROMPT இல் win என்று டைப் செய்தால் மட்டுமே விண்டோஸ் திறக்கும்.



MS OFFICE ஐப் பொறுத்தவரையில் word மற்றும் excel 95 மட்டுமே இருந்தன. அந்தத் துறையினர் அனுப்பும் கடிதங்கள் word பைலாகவும் ஒரு சில அறிக்கைகள் மட்டும் excel பைல்கலாகவும் சேமித்து வைக்கப்பட்டன.  நான் டிப்ளமா படித்தபோது விண்டோஸ் மற்றும் எம் எஸ் ஆபிஸ் பாடங்களாக இருந்ததில்லை.  இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன்.  அதுவும் மிக வேகமாய்.  காரணம் நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் வரை கணினியில் வேலை இருந்ததே. வேலையை கச்சிதமாக செய்ய முடியும் என்றாலும் வேகமாக முடிப்பதென்பது நான் அங்கே தான் கற்றுக்கொண்டேன்.  எக்சல் மற்றும் வேர்ட் போன்றவற்றில் நிறைய ஷார்ட்கட் இருப்பதை கண்டுபிடித்து ஒவ்வொன்றாக பழகிப்பழகி ஆறே மாதங்களில் எல்லா வேலைகளையும் நன்கு கற்றுக்கொண்டேன்.



FOXPRO வில் வேலை செய்யும்போது கீ-போர்ட் மட்டுமே தேவைப்படும்.  அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய புத்தகங்களை மடியில் வைத்துக்கொண்டு டேட்டா என்ட்ரி செய்யவேண்டும்.  அந்த நேரத்தில் மவுஸ் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அதைத் தூக்கி  CPU மேல் வைத்துவிடுவேன்.  மீண்டும் வேர்ட் அல்லது எக்சல் போன்ற அப்ளிக்கேஷன்களில் வேலை செய்யும்போது (பெருமைக்காகத்தான்) CPU மேல் வைத்திருக்கும் மவுசை எடுக்காமலே கீபோர்ட் மட்டுமே உபயோகித்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன் (நீயெல்லாம் அவ்வளவு பெரிய அப்படக்கரா என்று கேட்கக்கூடாது).



ஒரு நாள் மவுஸ் வேலை செய்யவில்லை.  கீ போர்டிலும் என்டர் கீ மட்டும் வேலை செய்யவில்லை.  புதிய மவுஸ் மற்றும் கீபோர்ட் வாங்கலாம் என்றால் நான்கு நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்.  (அப்போதெல்லாம் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைக்காது) ஆனாலும் ஒரு டாக்குமெண்டை எடிட் செய்து பிரின்ட் எடுத்துக்கொடுத்தேன்.  "எப்படிடே, இவ்வளவு விரசையா எடுத்துக்கொடுத்தே?" என்று மற்றவர்கள் வியந்தே போனார்கள்.


ஆரம்பத்தில் கணினியை பயன்படுத்துவதற்கு மற்றவர்களிடன் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த எனக்கு சில நாட்களுக்குப் பின் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு "ஞானம்" வந்துவிட்டது.  பின்னர் பல இடங்களில் பணி நிமித்தமாக அலைந்து பலவிதமான கணினிகளை பயன்படுத்தியிருக்கிறேன்.  இன்று வரை புதிய புதிய தகவல்கள், சாப்ட்வேர்கள் என கற்றுக்கொண்டே இருக்கிறேன்.  அது சரி, இந்த ப்ளாகரின் HTML பார்த்தாலே தலை சுத்துதே.  இது பத்தி தெரிந்தவர்கள் சொல்லவும்.



இதோட போதும்னு நினைக்கிறேன், அடுத்த தொடர்பதிவுக்கு தென்றல் சசிகலா அழைத்திருக்கிறார், அதுவும் ரெடி பண்ணனும்.



நன்றி