இதுவரை இந்த தொடர்பதிவுக்கு மூன்றுபேர் அழைத்துவிட்டார்கள். திரு.சம்பந்தம் (சொக்கன் சுப்பிரமணியன்) அவர்கள், சாமானியன் மற்றும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ். எழுதலாமா வேண்டாமா என்று என்று நினைத்திருந்த எனக்கு வெறும் பத்து கேள்விகள் தானே முயற்சி செய்வோம் என்று தொடங்கியதில் ஒரு சீரியஸ் பேட்டி கண்டது போலாகிவிட்டது. சீரியஸ் பேட்டி என்பதைவிட ஒரு சுய பரிசோதனை பதிவாகிவிட்டது. எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் சொந்த அனுபவங்களால் கொஞ்சம் சீரியசாகவே இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.





1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நான் பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டது. நிறுத்தி என்றால் மொத்தமாக நிறுத்தி என்று பொருள் கொள்ளவேண்டாம். கோவிலுக்குப் போவதுடன் சரி. புத்தாடை அணிவதோ கேக் வெட்டுவதோ கிடையாது. அலுவலகம் இருந்தால் சென்றுவிடுவேன். இருந்தாலும் அன்றைய தினம் ஒரு சின்ன குதூகலம் மனதினுள் இருந்துகொண்டே இருக்கும். நூறாவது பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம் என்பதால் மனைவி, மக்கள், பேரக்குழந்தைகளுடன் ஜாலியாகக் கொண்டாடவே விருப்பம்.



2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

இபோதைக்கு Excel Macros, VBA மற்றும் SQL. அலுவலக வேலைக்கு அவசியப்படுகிறது. பின் வரும் நாட்களில் என்னவெல்லாம் தேவைப்படுமோ எல்லாமே கற்றுக்கொள்வேன்.


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

கொஞ்சம் கஷ்டமான கேள்வி. அதிகம் யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லாம் வேகம். ஓடிக்கொண்டே இருப்பதால் சிரிக்க மறந்துவிடுகிறேன். சிரித்ததையும் மறந்துவிடுகிறேன். ம்ம், கடைசியாக நேற்று அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின்போது டைனிங் ஹாலே அதிரும்படி சிரித்தேன்.


4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?

எங்காவது வெளியே போய்விடுவேன். என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருந்துவிடலாம். காற்று இல்லாமல் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்கமுடியாது.


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

இருவருமே விட்டுக்கொடுத்து போங்கள். உனக்காக இது செய்தேன், அது செய்தேன் என்று சொல்லிக்காட்டாதீர்கள். மற்றவர் முன் குறை சொல்லாதீர்கள்.


6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

முதலில் நம் கண் முன்னால் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பேன். பின் காதுகளுக்கு வரும் பிரச்சனைகளை.


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

முதலில் அம்மா, அப்பா. பின் மனைவி. ஒரு நண்பர் மற்றும் ஒரு நலம் விரும்பி. இத்தனை நாட்களாக இப்படித்தான் செய்கிறேன்.


8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

பொங்கல் தான். மிகப்பெரிய பிரச்சனை ஆக்கிவிடுவேன். இந்த விஷயத்தில் நான் இழந்தவர்கள் ஏராளம்.


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அந்த நிகழ்வை அவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால் சில நாட்களுக்கு (அவருக்கு வாழ்வில் பிடிப்பு வரும்வரை) வெறும் ஆறுதல் மட்டுமே. 


10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

கண்டிப்பாக நான் தனியாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறேனோ அவை எதையுமே செய்யமாட்டேன். டிவி, பாட்டு, சாப்பாடு, தூக்கம் என்று பொழுதைக் கழிப்பேன்.

தொடர்பதிவுக்கு அழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. இதே பத்து கேள்விகளைக் கேட்டு நானும் சிலரை அழைக்க ஆசைதான். ஆனால் நிறைய பேர் அழைக்கப்பட்டிருப்பதால் கொஞ்சம் குழப்பம். அதனால் யார் யாரெல்லாம் தொடரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ தொடருங்கள்.

-------------------

அடுத்து வருவது:   நான்சி (சிறுகதை)