பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம்



கடந்த மாதத்தில் ஒருநாள் மாலை.  வழக்கம்போல நான் பதிவுகளைப் படித்து பின்னூட்டங்கள் டைப் அடித்துக் கொண்டிருந்தேன்.  என் வீட்டம்மா குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வாக்கிங் செல்வதாகச் சொன்னார்கள், நானும் வழக்கம்போல முகத்தைக்கூடத் திருப்பாமல் மண்டையை மட்டும் ஆட்டினேன்.  அவர்கள் போய் கொஞ்சநேரம் கூட ஆகவில்லை.  காலிங் பெல் அடிக்கும் சத்தம்.  அடடடா யார்றா அது டிஸ்டர்பன்ஸ் என்று மனதில் திட்டிக்கொண்டே கதவைத் திறந்தேன்.  பக்கத்து வீட்டுப் பெண்.



 முகத்தில் லேசான பதட்டம், அதை நான் கவனிக்கவில்லை. "அவ வாக்கிங் போயிருக்காளே" என்றேன். "!@#$%^&*()_+{}|":><?" பீகாரி கலந்த ஹிந்தியில் ஏதோ சொன்னார். எனக்கு ஹிந்தி என்பது "ஏக் காவ் மே ஏக் கிஸான்" என்ற அளவுக்கே என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவர் அப்படி இப்படி என்று ஒரு ஐந்து நிமிடம் விளக்கி எனக்குப் புரியவைத்துவிட்டார்.  அவருடைய இரண்டு வயது மகளுக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை, உடனே வந்து பார்க்கவேண்டும் என்று புரிந்துகொண்டேன்.



அவர்கள் இருக்கும் வீடு எங்கள் வீட்டுப் பக்கத்தில் இரண்டாவது மாடியில் தான் இருக்கிறது.   அந்தப்பெண் முன்னால் செல்ல நான் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்.  பிரச்சனை மிகவும் பெரிது என்று அவர் படியேறும் வேகத்தை வைத்துப் புரிந்துகொண்டேன்.  நானும் வேகமாகப் படியேறி அவரது வீட்டுக்குள் செல்ல ஹாலில் இருக்கும் சோபாவில் அவருடைய இரண்டு வயது மகள் அமைதியாகப் படுத்திருந்தாள்.



மீண்டும் அவர் பீகாரி கலந்த இந்தியில் ஏதோ சொல்ல முயல, "நான் பாத்துக்கறேன்" என்று கூறிவிட்டு குட்டிப்பெண்ணுக்கு வலதுபக்கம் அமர்ந்தேன், அவளது அம்மா இடதுபுறம் அமர்ந்துகொண்டார். குழந்தையின் கண்களை ஆராய்ந்தேன்.  கண்ணில் ஒன்றும் பிரச்சனையில்லை, தேனில் மிதக்கும் திராட்சைப்பழம் போல பளபளப்பாக இருந்தது.  "நல்லாத்தானே இருக்கு?" என்றேன். மூக்கில் கைவைத்து சோதித்துப் பார்க்குமாறு சைகை கொடுத்தார்.  "ஆங்கோ மே‍"னு சொன்னீங்களே, மூங்கோ மேனு சொல்ல வேண்டியதுதானே" என்று சொல்லிவிட்டு குழந்தையின் மூக்கில் டார்ச் அடித்துப் பார்த்தேன்.  உள்ளே சீவிய பென்சிலின் துகள் போல எதுவோ இருந்தது.




எனக்குப் புரிந்துவிட்டது.  குழந்தை விளையாட்டாக பென்சில் சீவிய துகள்களை மூக்கில் போட்டிருக்கிறாள்.  அது மூக்கின் துளையில் சென்று ஒட்டிக்கொண்டது.  அவளது அம்மா அதை எடுக்கிறேன் பேர்வழி என்று காது குடையும் பஞ்சைக் கொண்டு எடுக்க முயல, துகள் மேலும் உள்ளே சென்றுவிட்டது.  நான் மீண்டும் டார்ச் அடித்து குனிந்து பார்க்க, குழந்தையின் அம்மாவும் குனிந்து பார்க்க எங்களது தலை லேசாக முட்டிக்கொண்டது.  "சாரி" என்று சொல்லிவிட்டு நான் மெல்லத் திரும்ப, வாசலில் என் மனைவி இடுப்பில் கை வைத்தபடி எங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.



இங்கே தான் பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் ஆரம்பிக்கப்போகிறது, என் மனைவி என்னை அடித்து, துவைத்து, பிழிந்து, காயப்போட்டு க்ளிப் மாட்டி விட்டாள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.  வாசலில் நின்றிருந்த என் மனைவி நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு பிரச்சனைக்கான தீர்வை மடமடவென்று சொல்ல ஆரம்பித்தாள்.  இது காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனை, எனவே இஎன்டி ஸ்பெஷலிஸ்டிடம் போகவேண்டும் என்று.  பக்கத்தில் என்று பார்த்தால் எனக்குத் தெரிந்து சாந்தோமில் ஒரு டாக்டர் இருக்கிறார், ஆனால் எனக்கு சரியான இடம் தெரியாது என்றேன்.  உடனடியாக நேரத்தை வீணாக்காமல் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டாக்டர் பி.வி.ராமன் அவர்களிடம் செல்வதென்று முடிவாயிற்று.  அவர் பொது மருத்துவர்தான், இருந்தாலும் அவர் அருகில் இருக்கும் இஎன்டி டாக்டரை பரிந்துரைப்பார் என்பதால் அவரிடம் செல்ல முடிவெடுத்தோம்.



உடனடியாக சற்றும் காலம் தாமதிக்காமல் என்னுடைய இருசக்கர வாகனத்தில் முன்னால் குழந்தையை உட்காரவைத்துக்கொண்டு புறப்பட்டேன்.  அடுத்த இரண்டு நிமிடங்களில் டாக்டர் பி.வி.ராமன், உள்ளே நோயாளி ஒருவர் உட்கார்ந்திருக்க, வெளியேயும் கூட்டம்.  எதையும் பொருட்படுத்தாமல் "டாக்டர், எமர்ஜென்சி" என்று உள்ளே நுழைந்தேன், விஷயத்தை சுருக்கமாகச் சொன்னேன்.  அவர் உடனடியாக மயிலாப்பூர் ஜெயின் கோவில் அருகே இருக்கும் இஎன்டி டாக்டர் மகேந்திரனைப் பார்க்கச்சொன்னார்.  அடுத்த ஐந்து நிமிடத்தில் மயிலாப்பூர் சென்றடைந்தேன். ஜெயின் கோவிலுக்கு முந்தைய கட்டிடம் டாக்டர் மகேந்திரனின் கிளினிக், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டேன்.



குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினேன்.  கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.  அங்கிருந்த அலுவலகப் பணியாளர் ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.  அவர், "டாக்டர் வேற ஒருத்தருக்கு பாத்திட்டிருக்காரு, ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க" என்றார்.  சரியென்று காத்திருக்க ஆரம்பித்தேன்.  இன்னொரு பணியாளர் அழைத்தார், "சார், பேரு சொல்லுங்க" என்றார்.  திருதிரு என்று விழித்தேன். "சார், குழந்தை பேரு சொல்லுங்க சார்" என்றார்.  "குழந்தை பேரு...." மீண்டும் திருதிரு என்று விழித்தேன்.  "இது உங்க குழந்தை தானே?" என்றார்.  "இல்லை, பக்கத்துவீட்டுக் குழந்தை" என்றேன்.  "அப்போ உங்க பேரு சொல்லுங்க" என்றார், சொன்னேன்.  அந்தப் பதட்டத்திலும் எனக்கு கவுண்டமணி வசனம் நினைவுக்கு வந்தது, "கேக்குறான் பாரு கேணப்பய மாதிரி ஒரு கேள்விய" என்று.  நான் என்ன கலரு, பாப்பா என்ன கலரு, நான் பக்கா தமிழ்நாடு, பாப்பா பீகாரு, எங்க மூஞ்சியப் பாத்துமா இப்படி ஒரு சந்தேகம். மனதில் திட்டிக்கொண்டே இருந்தேன்.



கொஞ்ச நேரத்தில் டாக்டர் மகேந்திரன் அவர்களின் முன்னால் அமர்ந்திருந்தோம்.  "பென்சில் ஸ்லைஸ் மூக்குக்குள் போய்விட்டது, அதை எடுக்கவேண்டும்" என்றேன்.  கண்ணுக்குமேலே லென்ஸ் ஒன்றை வைத்துக்கொண்டு தன் நெற்றியில் கட்டியிருந்த டார்ச்சை ஆன் செய்து மூக்கில் இரண்டு விநாடிகள் அடித்துப் பார்த்தார். "ஓகே, பாப்பாவோட காலை உங்க காலால இறுக்கிப் பிடிச்சுக்கோங்க, கை ரெண்டையும் உங்க கையால பிடிச்சுக்கோங்க" என்றார்.  பிடித்துக்கொண்டேன், தலையை ஆடாமல் அசைக்காமல் பணியாளர் ஒருவர் பிடித்துக்கொண்டார்.  இதுவரை எதற்குமே அழாத அந்தக் குழந்தை இப்போது அழ ஆரம்பித்தது.  நானோ இந்தியில் சமாதானம் சொல்லத் தெரியாமல் கைகளையும் கால்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தேன்.









டாக்டர் சிறு இடுக்கி போன்ற ஒரு வஸ்துவை எடுத்தார், அதைப் பார்த்ததும் குழந்தை மேலும் வீறிட்டு அழ ஆரம்பித்தது.  பணியாளர் தலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க டாக்டர் அந்த இடுக்கியை மூக்கினுள் விட்டு வெளியே எடுத்தார். உள்ளிருந்த பென்சில் துகள் இடுக்கியில் வந்துவிட்டது.  பின்னர் மூக்கினுள் ஒரு ட்யூப் விட்டார், இன்னும் கொஞ்சம் உடைந்த துகள்கள் சளியுடன் சேர்ந்து வந்துவிட்டது.  ஒரே நிமிடம்தான், வேலை முடிந்தது.  ஒரே நாள் மட்டும் மூக்கில் விடுவதற்கு மருந்து எழுதிக் கொடுத்தார்.



எனக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதி வந்தது.  டாக்டர் பீஸைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து மருந்தையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை கூறியதும் அவர்கள் நிம்மதியடைந்தார்கள்.  பின்னர் போகும் வழியில் டாக்டர் பி.வி.ராமனிடம் நன்றி தெரிவித்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன்.