வாத்தியார்! எல்லாருக்கும் எம்.ஜி.ஆர். தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் எங்களுக்கு எங்க வாத்தியார் பாலகணேஷ் தான் ஞாபகத்துக்கு வருவார். எங்களுக்கு என்றால்? நாங்கள் ஒரு ஐந்து பேர் இருக்கிறோம். பதிவர்கள் தான். பல நாட்களாக அவரை நாங்கள் வாத்தியார் என்று அழைத்தே பழக்கமாகிவிட்டது.


சிஷ்யர்கள்


வாத்தியாரை நான் எப்போது முதன்முதலில் பார்த்தேன் என்று இன்னும் ஞாபகம் இருக்கிறது. பேஸ்புக்கில் அப்போது நான் இருந்திருக்கவில்லை. ப்ளாக் மட்டும் தான். ஒரு தொழில்நுட்ப சந்தேகம் கேட்பதற்காக என்னை போனில் அழைத்திருந்தார். பின்னர் ஒரு நாள் சீனுவுடன் தி.நகர் நடேசன் பார்க்கில் சந்தித்தோம்.

எங்களுக்கு (சிஷ்யர்களுக்கு) வாத்தியார் பதிவு எழுதிய அடுத்த நிமிடம் படித்துவிட்டு பின்னூட்டம் எழுதிவிட வேண்டும். அதில் சில நாட்களில் நான் முந்தி நீ முந்தி என போட்டியெல்லாம் கூட வந்திருக்கிறது.

எல்லாருக்கும் தெரிந்திருக்கும். வாத்தியாரின் எழுத்துக்கள் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக ஹாஸ்யப்பதிவுகள். சில பதிவுகளைப் படித்துவிட்டு நானே வாய்விட்டு சிரித்திருக்கிறேன். காமெடியில் கலக்குபவர். இங்கே கலக்குபவர் என்று சொல்வதை விட கலக்கியவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

முன்னூறுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியவர் ஏனோ தெரியவில்லை சில நாட்களாக எதுவுமே எழுதுவதில்லை. சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்திய பதிவுதான் அவர் எழுதிய கடைசிப் பதிவு. நேரமின்மை என்று சப்பைக்கட்டு கட்டினாலும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒதுக்குவது சாதாரணம் தான். மனது வைத்தால் சாத்தியம் தான். பல நாட்களாக நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

இது கவர்ச்சி போஸ் இல்லை, போன் பேசுகிறார்


//அதுமாதிரி நான் காணாமப் போயி திரும்ப வந்ததுக்கு நம்ம ஸ்.பை. சரவணன் உங்க எல்லாருக்கும் விருந்து வெக்காட்டியும் அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது மெகா விருந்து ஒண்ணு வெப்ப்பாருன்னு நெனக்கிறேன். ஹி... ஹி...!//

இது முன்னொரு முறை வாத்தியார் காணாமல் போனபோது நான் எழுதிய பதிவுக்கு பதிலாக எழுதினார். அதே மாதிரி மீண்டும் வலைக்கு பழைய புத்துணர்வோடு வரவேண்டும் வாத்தியாரே!

இன்றைக்கு வாத்தியாருக்குப் பிறந்த நாள். போன வருடத்துக்கு முந்தைய வருடம் எங்கள் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியது ஞாபகம் வருகிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே!!!